ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசு நடவடிக்கையால் எழும் ஊகம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மசோதா வியாழன் அன்று மக்களவையில் நிறைவேறியது.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளபடி, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) எனப்படும் வணிகர் கட்டணத்தை விதிப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனைகளில் பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் கிடைக்காத நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து பராமரிப்பது கடினமாகி வருவதாக தொழில்துறை வல்லுநர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு, ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, "இதன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்.டி. ஆர்-Merchant Discount Rate) விதிக்க அனுமதிக்கப்படலாம். இந்தத் திருத்தம் எம்.டி. ஆர் வசூலிப்பதற்கான சட்ட அடிப்படையை உருவாக்குகிறது. எனினும், கட்டணம் எவ்வளவு இருக்கும் அல்லது எந்தெந்த பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக சுமார் 1.5% எம்.டி. ஆர் வசூலிக்கப்படுகிறது. டெபிட் கார்டுகளுக்கு பொதுவாக 0.9% வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் எம்.டி. ஆர் வசூலிக்கப்படுவதில்லை.

புதன்கிழமை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர் நடைமுறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது இப்போதைக்கு மிகவும் முன்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

எனினும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலுக்கு நிலையான நிதி அமைப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரூபே டெபிட் கார்டு மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியின்படி, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு செய்யப்படும் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பணப்பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை விதிப்பதற்கான அடித்தளத்தை இந்தத் திருத்தம் உருவாக்குகிறது.

இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, திங்கள்கிழமை, பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலகம் தனது எக்ஸ் கணக்கில், "ஜூலை மாதத்தில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள் 23.66 பில்லியனை எட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன" என்று பதிவிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை விமர்சித்த காங்கிரஸ், "மோதி உங்கள் பணத்தைப் பறிப்பதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளார். விரைவில் ரூ.2,000-க்கும் அதிகமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம். மக்கள் ஏற்கெனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நரேந்திர மோதிக்கு அதுகுறித்து அக்கறை இல்லை. புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்களிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் பறிக்க அவர் விரும்புகிறார்." என்று கூறியது.

பாஜக எம்.பி என்ன சொன்னார்?

யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான மத்திய அரசின் மசோதா குறித்து, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான பிரவீன் கந்தேல்வால், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "அரசு இதைக் கொண்டு வருகிறது என்றால், அதற்குப் பின்னால் சில நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்" என்றார்.

குறிப்பிட்ட வரம்புக்கு மேல் கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எந்தவொரு சேவையைப் பயன்படுத்தினாலும் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு சுமை ஏற்படக் கூடாது என்பதற்காக ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

"கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டால், வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதைப் போல, குறைந்த அளவிலான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.

"தொழில் செய்வது எளிதாகவும், மக்களின் வாழ்க்கையில் வசதியும் தொடர்ந்து நிலைத்திருக்கும் பட்சத்தில், பணம் செலுத்துவதற்கு வணிகர்கள் எதிரானவர்கள் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது?

இந்தக் கட்டணம் தொடர்பான அச்சம் குறித்து சமூக ஊடகங்களிலும் மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சதீஷ் குமார் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், "என்ன ஒரு சிறப்பான நடவடிக்கை. நீங்கள் ஐந்து முறைக்கும் மேல் (ஏடிஎம் -ல் இருந்து) பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். யுபிஐ மூலம் ரூ.2,000-க்கும் அதிகமாகச் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்தது என்ன?" என்று பதிவிட்டுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் சௌரப் திரிபாதி, உலகின் சிறந்த டிஜிட்டல் பொது பணப்பரிவர்த்தனை அமைப்பைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"எம்டிஆர் (Merchant Discount Rate-MDR) என்பது வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டாலும், அவர்களில் பலர் வாடிக்கையாளர்களை ரொக்கமாகச் செலுத்துமாறு வலியுறுத்தலாம் அல்லது அந்தச் செலவைப் பொருளின் விலையில் சேர்க்கலாம். இது யுபிஐ -யை பிரபலமாக்கிய ஊக்குவிப்பு முறையைப் பலவீனப்படுத்தும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"யுபிஐ-யிலிருந்து வருவாய் ஈட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன், சில ஆயிரம் கோடி ரூபாய் எம்டிஆர் வருவாய்க்காக இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பொது டிஜிட்டல் தளங்களில் ஒன்றின் அடிப்படை நோக்கத்தைப் பலவீனப்படுத்துவது சரியானதா என்பதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார், "யுபிஐ மற்றும் ரூபே கார்டுகளுக்கு வணிகர்களிடம் கட்டணம் வசூலித்தால், இறுதியில் அந்தச் சுமை நுகர்வோர் மீது விழும்" என்று அவர் கூறியுள்ளார்.

மற்றொரு எக்ஸ் தளப் பயனரான ரிஷி பாக்ரி தனது பதிவில், "யுபிஐ அமைப்பைப் பராமரிக்க என்பிசிஐ ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி செலவிடுகிறது. குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவுகள் மற்றும் வணிகர் கட்டணங்கள் தொடர்பான அரசின் சுமார் ரூ.1,500 கோடி செலவை இது மிச்சப்படுத்தியுள்ளது. இதனால்தான் மோதி அரசு யுபிஐ -யை எந்தக் கட்டணமும் இல்லாமல் வைத்திருக்க விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்க வேண்டாம் என்று முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வி. விஜயசாய் ரெட்டி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனைக் டேக் செய்து எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்க அனுமதிக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். யுபிஐ -க்கு எம்டிஆர் (MDR) விதிப்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள பல ஆண்டுகால முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும். பரிவர்த்தனைகளுக்கு குறைந்த அளவிலான கட்டணம் விதிக்கப்பட்டாலும், பல நுகர்வோரும் வணிகர்களும் மீண்டும் ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்குத் திரும்பக்கூடும். இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் புரட்சியைப் பாதுகாப்போம்". என்று கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியால் யுபிஐ-க்கு நிதியளிக்க முடியுமா?

ஆகஸ்ட் 6-ஆம் தேதி 'தி இந்து' நாளிதழில், 'யுபிஐ பயன்பாட்டிற்கான கட்டணத்தைச் செலுத்த ரிசர்வ் வங்கியிடம் போதுமான நிதி உள்ளது' ('RBI has enough funds to pay for UPI usage') என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது.

அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டிய அந்தச் செய்தியின்படி, வங்கிகள் எம்டிஆர் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் திட்டம், தற்போது குறிப்பிட்ட சில வகை வணிகர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.1-1.5 கோடி வருவாய் ஈட்டும் வணிகர்கள் மற்றும் ரூ.2,000-க்கும் அதிகமான மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வணிகர்கள் அடங்குவர்.

"எனினும், மசோதாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை இன்னும் பரந்த அளவிலான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.

வங்கித் துறை அதிகாரிகளின்படி, யுபிஐ அமைப்பை இயக்கவும் பராமரிக்கவும் தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு சுமார் ரூ.0.4 முதல் ரூ.1 வரை செலவாகிறது."

அந்தச் செய்தியின்படி, அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், 2025-26ஆம் ஆண்டில் 24,161.69 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், யுபிஐ அமைப்பை இயக்குவதற்கான ஆண்டு செலவு சுமார் ரூ.9,664 கோடி முதல் ரூ.24,161 கோடி வரை இருக்கும்.

அதில், "2025-26ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. இதில் சுமார் ரூ.2.9 லட்சம் கோடி உபரி நிதியாக மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் யுபிஐ அமைப்பை இயக்குவதற்கான செலவு, இந்த உபரி நிதியில் சுமார் 3% முதல் 8.5% வரை இருந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி-யின் உபரி நிதி பரிமாற்றம் 2021-22ஆம் ஆண்டில் ரூ.30,307.45 கோடியாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் சுமார் ரூ.2.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 857% அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் 'யுபிஐ, என்றென்றும் இலவசம்' ('Free UPI, Forever') என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டது.

அந்தத் தலையங்கத்தில், "யுபிஐ-யை இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் கருதலாம். இது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப்பரிவர்த்தனை தளமாகும். உலகளவில் நடைபெறும் இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்தத் தளத்தில் நடைபெறுகின்றன. 2025-26ஆம் ஆண்டில் 24,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.314 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ.346.4 லட்சம் கோடியாக இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"யுபிஐ எப்படி இவ்வளவு பெரிய அளவுக்கு வளர்ந்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அதன் வளர்ச்சியை வேகப்படுத்திய மிக முக்கியமான முடிவு எம்டிஆர் கட்டணத்தை நீக்கியதுதான்."

மேலும் அந்தத் தலையங்கத்தில், "2025-26ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1,700 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை அழித்தது. புதிய நாணயத்தாள்களை அச்சிட ரூ.4,875 கோடி செலவிட்டது. யுபிஐ இல்லாமல் இருந்திருந்தால், ரொக்கப் பணத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்தச் செலவு எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும்? கூடுதல் கிளைகள், ஏடிஎம்கள், ஊழியர்கள் மற்றும் ரொக்கப் பண மேலாண்மைக்காக யுபிஐ தங்களுக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது என்பதையும் வங்கிகள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

"இலவச யுபிஐ என்பது நாட்டுக்கு தொடர்ந்து பலனளித்து வரும் ஒரு அமைப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தக்கூடிய கட்டணங்களை விதிப்பதற்குப் பதிலாக, அதன் செலவுகளை ஈடுகட்டுவதற்கான பிற வழிகளை ஆராய்வதுடன், யுபிஐ வழங்கும் இந்தக் குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அந்தச் செய்தி முடிவடைகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு