You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் வாபஸ் ஏன்? செயற்கை சுவையூட்டிகளால் என்ன பாதிப்பு?
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையில் இருக்கும் 'என்ரிகா' நிறுவனத்தின் 11 விதமான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13 அன்று சுற்றறிக்கை அனுப்பிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாக மத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசுக்கும் இந்த தடைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிபிசியிடம் விளக்கிய தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், இரண்டுமே மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை எடுத்த நடவடிக்கை என்றார்.
இதுபற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள், அது விதிமுறைகள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டுமென்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி.
எல்லா நிறுவனங்களும் பயன்படுத்தும் அளவில்தான் தங்களுடைய தயாரிப்புகளிலும் செயற்கை சுவையூட்டி பயன்படுத்தப்படுவதாக என்ரிகா' நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.
இத்தகைய செயற்கை சுவையூட்டி கலந்த மதுபானம் மற்றும் உணவை தொடர்ந்து உட்கொள்வது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
11 வகை மதுபானங்களுக்கு ஒரே நாளில் தடை வாபஸ்
டாஸ்மாக் அதிகாரிகள் பகிரும் தகவலின்படி, டாஸ்மாக் கடைகளுக்கு 19 மதுபான தொழிற்சாலைகள் மற்றும் பீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இயங்கி வரும் என்ரிகா என்டர்பிரைசஸ் என்ற மதுபான ஆலையும் இவற்றில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்திலிருந்து 11 விதமான மதுபானங்கள் வாங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13 அன்று, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், தமிழகத்திலுள்ள அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டெப்போ மேலாளர்கள் என அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் இந்த நிறுவனத்திடமிருந்து டாஸ்மாக் கொள்முதல் செய்யும் 11 வகையான மதுபானங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவற்றை மறுஉத்தரவு வரும் வரை விற்பனை செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தியிருந்தார்.
''ஆகஸ்ட் 11 அன்று, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (fssai) தென் மண்டல மத்திய நியமன அலுவலர், என்ரிகா ஆலையில் மேற்கொண்ட ஆய்வில், இந்த 11 விதமான மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபற்றி கலால் ஆணையரிடம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்த 11 விதமான மதுபானங்களை சில்லறை மது விற்பனைக் கடைகள், எஃப்.எல்.2 (மனமகிழ் மன்றங்கள்) மற்றும் எஃப்.எல்.3 (ஓட்டல் மதுக்கூடங்கள்) ஆகியவற்றுக்கும் விற்பனை செய்ய வேண்டாம்.'' என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றிய விவாதங்கள் சூடுபிடித்துவந்த நிலையில், ஒரே நாளில் அதாவது ஆகஸ்ட் 13 அன்றே அந்த உத்தரவு திருப்பிக் கொள்ளப்பட்டது. அதுவும் பெரும் விவாதத்துக்குள்ளானது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, ''ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் மது விற்பனை நடக்கிறது. மதுபானங்களும் உணவுப்பட்டியலில் இருப்பதால் அவற்றின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஏனெனில் மதுபானங்களால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை மிக அதிகம்.'' என்றார்.
மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே இதுதான் என்று கூறும் மருத்துவர் குழந்தைசாமி, அந்த ஆணையம் மதுபான ஆலைகளில் நடத்தும் சோதனைகள் குறித்து பொதுவெளியில் தகவல்களைப் பகிர வேண்டும் என்கிறார். ஏனெனில் இது மக்களின் வாழ்க்கை தொடர்புடையது என்று கூறும் அவர், மருந்து கட்டுப்பாட்டுத்துறை, தரமற்ற மருந்துகளை தடை செய்து அதை இணையங்களில் வெளியிடுவது போல இந்த ஆணையமும் மதுபானங்களின் தரப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
''ஒரு வேளை மதுபானத்தின் தரம் குறைவாக இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தால் அவற்றைத் தடை செய்வதும் ஆணையத்தின் பொறுப்பாகும். கடந்த ஆகஸ்ட் 13 அன்று தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் தடை செய்தது. மறுநாளே அந்தத் தடையை நீக்கிவிட்டது. ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றதன் காரணத்தை, நீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் வேண்டுகோள்.'' என்றார் குழந்தைசாமி.
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமாரை பல முறை தொடர்பு கொண்டபோது அவரிடம் பதில் பெறமுடியவில்லை. இதுபற்றி பிபிசி தமிழ் எழுப்பிய பல கேள்விகளுக்கு தமிழக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விரிவாக பதிலளித்தார்.
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''அந்த தடைக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய உணவு பாதுகாப்புத்துறையின் (FSSAI) மண்டல அதிகாரிகள் என்ரிகா ஆலையில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 11 வகையான மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. பின்பு அதே அதிகாரிகள் கூறிய தகவலால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் காரணம், மத்திய அரசின் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள்தான்.'' என்றார்.
''எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள், 11 விதமான மதுபானங்களை ஆய்வு செய்யவில்லை. மதுபானத்திலுள்ள செயற்கை சுவையூட்டி அளவுக்கும், ஸ்டிக்கரில் உள்ள அளவுக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறி, ஸ்டிக்கரை மாற்றச் சொல்லியிருக்கின்றனர். அதை மாற்றாததால் மதுபானங்கள் விற்பனையை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். அதன்படியே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மறுநாள் ஆணைய விதிகளின்படி, ஸ்டிக்கரை மாற்றுவதாக அந்த நிறுவனம் தந்த உறுதியை ஏற்று, மத்திய அதிகாரிகள் தடையை விலக்கச் சொன்னார்கள்; திருப்பிக் கொள்ளப்பட்டது.'' என்றார் அமைச்சர் விக்னேஷ்.
''ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பின்பு ஒட்டுமொத்தமாக எல்லா மதுபானங்களிலும் இந்த செயற்கை சுவையூட்டிகளின் அளவையும், தரத்தையும் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். ரூ.50 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் மதுபானத்தின் தரத்தை மாநில உணவு பாதுகாப்புத்துறையால் பரிசோதிக்க முடியாது. மத்திய அரசின் எஃப்எஸ்எஸ்ஏஐ மட்டுமே அதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பு.'' என்றார் அமைச்சர் விக்னேஷ்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியது என்ன?
இதுபற்றி சம்பந்தப்பட்ட நிறுவனமான 'என்ரிகா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்' (Enrica Enterprises Private Limited) நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாகி பிலிப்சிடம் இதுபற்றி பிபிசி பேசியபோது, ''எல்லா மதுபானங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களிலும் செயற்கை சுவையூட்டி உள்ளது. அதிகளவு இல்லை. இதுகுறித்த மேலதிக விவரங்கள் இல்லை.'' என்றார்.
செயற்கை சுவையூட்டி என்பது என்ன?
11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் விலக்கப்பட்டாலும் இந்த செயற்கை சுவையூட்டிகள் (Artiificial Flavor) என்பது என்ன, அதை உட்கொள்வோருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்த விவாதங்களும், தேடல்களும் அதிகரித்துள்ளன.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பகிரும் தகவலின்படி, உணவுகளின் சுவையையும் நறுமணத்தையும் மேம்படுத்துவதற்காக அவற்றில் சேர்க்கப்படும் திரவச்சாறுகள், சாரங்கள் சுவையூட்டிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இயற்கையான பழச்சாறுகள், சாரங்கள் போன்றவையே தூய சுவையூட்டிகள் எனப்படுகின்றன. செயற்கையான பொருள் பகுதியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்தினால் அது செயற்கை சுவையூட்டி எனக் குறிப்பிடப்படுகிறது.
செயற்கை சுவையூட்டிகளால் மது குடிப்பவர்களுக்கு என்ன பாதிப்பு?
இதுகுறித்து பிபிசியிடம் விளக்கிய குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி.மோகன் பிரசாத், ''இயற்கையாக ரம் தயாரிக்கும்போது வரும் சுவை இயற்கையானது. ஆனால் ஆல்கஹால் ஸ்பிரிட் எடுத்து ரம் சுவையை சேர்த்தால் அது செயற்கையானது. அப்படிச் செய்வது தவறுமாகும். நியூட்ரல் ஸ்பிரிட் உடன் விஸ்கியின் சுவையைச் சேர்த்துக் கொடுக்கும்போது அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும். ஆனால் அது உடலுக்கு பலவிதமான தீமைகளை ஏற்படுத்தும்.'' என்றார்.
''பழங்களிலிருந்து எடுத்துத் தயாரிக்கப்படும் சாறுகளை நொதிக்கவைத்து, அது கலப்பதற்கான உரிய காலஅவகாசம் கொடுத்து மதுபானங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் செயற்கை சுவையூட்டியைச் சேர்க்கும்போது, அதற்காக எந்தவிதமான ரசாயனங்களைப் பயன்படுத்தினார்களோ அதற்கேற்ப உடல் பாதிப்புகள் ஏற்படும்.'' என்றார் மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத்.
மேலும் விளக்கிய அவர், ''இந்த 11 விதமான மதுபானங்களில் வாசம் மற்றும் சுவைக்காக எந்தெந்த ரசாயனங்கள் கொண்ட செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதை வைத்தே அதன் பாதிப்பைச் சொல்ல முடியும். ரம், விஸ்கி மற்றும் பிராந்தி போன்ற மதுபானங்களில் வெண்ணிலா, காஃபி பிளேவர் போன்ற சுவையூட்டிகளைச் சேர்க்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால் நியூட்ரல் ஸ்பிரிட்டில் ரம் சுவையூட்டியைச் சேர்ப்பதை எஃப்எஸ்எஸ்ஏஐ அனுமதிப்பதில்லை.'' என்றார்
மதுபானங்களில் மட்டுமின்றி, குழந்தைகள் விரும்பி உண்ணும் பெரும்பாலான தின்பண்டங்களிலும் இத்தகைய செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பதால் பலவித பாதிப்புகள் ஏற்படுவதாகச் சொல்கிறார் குழந்தைகள் நலம் மற்றும் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். மூளையின் நரம்புகளைத் தூண்டி, ஓர் உணவுப் பொருளை, பானத்தை விரும்பி உண்ண வைப்பதே இந்த செயற்கை சுவையூட்டிகளின் தன்மை என்கிறார் அவர்.
பிபிசியிடம் பேசிய அவர், ''ஒரு தாவரத்திலிருந்தோ அல்லது ஒரு விலங்கிலிருந்தோ எடுக்கப்படுவதே இயற்கை சுவையூட்டி. அதே மணத்தையும் சுவையையும் ரசாயனங்களின் கலவையால் ஆய்வகங்களில் தயாரித்துக் கொடுப்பது செயற்கை சுவையூட்டி. அறிவியல் ஆராய்ச்சிகளில் இயற்கையில் ஒரு கொய்யாப்பழத்துக்கு என்ன வாசம் இருக்கிறதோ அதை செயற்கை சுவையூட்டியில் கொடுக்க முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வாசத்தின் காரணமாக, அது அந்தப் பொருள் கலந்தது என்று மனதில் நினைத்து சாப்பிடுவார்கள்.'' என்றார்.
''இப்போதுள்ள தயாரிப்புகளின் அளவுக்கேற்ப இயற்கை சுவையூட்டிகள் கிடைப்பதில்லை. செயற்கை சுவையூட்டிகள் எளிதில் கிடைக்கும் என்பதுடன் அவற்றைக் கொண்டு தயாரிப்பது உற்பத்திச் செலவை பெருமளவில் குறைக்கும். ஆனால் இந்த செயற்கை சுவையூட்டிகளால் உடலுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். அதைத்தொடர்ந்து சாப்பிடுவது ஆபத்தாக மாறும்.'' என்றார் அவர்.
''முதலில் இந்த வாசமும் சுவையும் ஒருவரை அடிமையாக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது, உடலில் உபாதைகள் துவங்கும். தலைவலி, உடலில் அசெளகரியம் ஏற்படும். உடலியல் பாதிப்புகளைத் தொடர்ந்து மன அழுத்தம் போன்ற உளவியல் பாதிப்புகள் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பலவிதமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றக் குறைபாடு (Metabolic syndrome) ஏற்படும்.'' என்றார் மருத்துவர் துரைக்கண்ணன்.
''குழந்தைகள் இந்த செயற்கை சுவையூட்டிகள் கொண்ட இனிப்பு, தின்பண்டம் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடும்போது, அதன் அளவைப் பொறுத்து கவனக்குறைவு/அதிகப்படியான செயல்பாடு குறைபாடு (ADHD - Attention-Deficit/Hyperactivity Disorder) பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் மிகவும் குறும்பாக இருப்பார்கள். அதை பெற்றோர் ஆரோக்கியம் என்று நினைப்பார்கள். ஆனால் அதுவே பிடிவாதமாக மாறும். செயற்கை சுவையூட்டி கலந்த உணவுப் பொருட்களுடன் அன்றாட உணவுப் பொருளைச் சாப்பிடும் போது உடல் பருமன் (ஒபெசிட்டி) உருவாகும்.'' என்றார் அவர்.
''மது அருந்துவோர் பெரும்பாலும் உடல் அனுமதிக்கும் அளவுக்கு குடிக்க மாட்டார்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும்போது ஆல்கஹாலுடன் செயற்கை சுவையூட்டிகளின் அளவும் உடலில் சிறிது சிறிதாகச் சேர்ந்து உடல் உபாதை, தலைவலி, மன அழுத்தம் ஆகியவற்றை உண்டாக்கும். மிக அதிக அளவில் உட்கொள்ளும்போது புற்றுநோய் பாதிப்பும் கூட ஏற்படும்.'' என்றார் மருத்துவர் துரைக்கண்ணன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு