You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் - இந்திய அரசிடம் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதாக தகவல்
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் மற்றும் தங்கள் தளங்களை நிர்வகிப்பதில் நடந்த 'தவறுகள்' குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகப் பிபிசிக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து பிரதமர் மோதியின் வீடியோவைச் சிறிது நேரம் நீக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு வலியுறுத்திய நேரத்திலேயே மார்க் ஜுக்கர்பெர்க்கிடமிருந்து இந்தப் பதில் வந்துள்ளது.
இந்தியாவில் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கத்தைப் (CSAM) பரப்பும் விளம்பரங்களை வெளியிடுவதாக, கடந்த மாதத்தில் பிபிசி ஐ நடத்திய புலனாய்வு ஒன்றில் தெரிய வந்தது.
இந்த புலனாய்வு செய்தி வெளிவந்த பிறகு, மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி, அந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்குமாறு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
பிபிசிக்கு இந்தத் தகவல் நம்பகமான வட்டாரங்கள் மூலம் கிடைத்தது.
பிபிசிக்குக் கிடைத்த தகவலின்படி, குறிப்பிட்ட உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவதற்காக அதிகளவில் பணம் செலுத்தப்பட்டது என்ற விஷயத்தை மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்து அவர் மன்னிப்பு கோரியதாக சில வட்டாரங்கள் மூலம் பிபிசிக்குத் தெரியவந்தது.
சட்டவிரோதமான உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தியதாகவும், குறிப்பிட்ட பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு கட்டண விளம்பரங்களை வெளியிட்டதாகவும் மெட்டா தனது தவற்றை ஒப்புக்கொண்டது.
உயர்மட்ட அதிகாரிகளுடன் மெட்டா குழு சந்திப்பு
மற்றொருபுறம், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா உலகளாவிய விவகாரங்களின் தலைவர் ஜோயல் கப்லான் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை புது டெல்லியில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தது.
பிரதமர் மோதியின் வீடியோவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கியதற்காக மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு கோரிய நேரத்திலேயே இந்தச் சந்திப்பு நடந்தது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், பிரதமர் மோதியின் வீடியோ தவறுதலாக எவ்வாறு நீக்கப்பட்டது என்பது குறித்து மெட்டா அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் மீண்டும் நடந்தால், இந்தியாவில் மெட்டா நிறுவனத்துக்குக் கிடைக்கும் சட்டப் பாதுகாப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் குழு எச்சரித்தது.
மெட்டா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
ஜந்தர் மந்தர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களின் போராட்டங்களின் போது ஜூலை 23 அன்று பிரதமர் மோதி பேசிய வீடியோ ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டது. அதன் பிறகு அது மீட்டெடுக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறு நடந்தது என்று மெட்டா தெளிவுபடுத்தியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விளக்கம் 'திருப்திகரமாக இல்லை' என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தளத்திலிருந்து அந்த உள்ளடக்கம் 'தவறுதலாக' நீக்கப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் அந்த வீடியோ இரண்டு தளங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கத்தைப் பரப்பும், பெண்களை இழிவுபடுத்தும் உள்ளடக்கம் இருக்கும் தளங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை மெட்டா தங்கள் உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79-இன் கீழ் அவர்களுக்குக் கிடைக்கும் 'சேஃப் ஹார்பர்' பாதுகாப்பை ரத்து செய்வோம் என்று குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே எச்சரித்ததாக, ஆகஸ்ட் 4 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
'சேஃப் ஹார்பர்' விதியின்படி, ஆன்லைன் தளங்களில் மூன்றாம் தரப்பினர் பதிவிடும் உள்ளடக்கத்துக்கு அந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை (குறிப்பிட்ட நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வரை).
கூகுள், மெட்டா, யூடியூப் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு நிஷிகாந்த் துபே, செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் மோதியின் வீடியோ நீக்கப்பட்டதை "மிகவும் தீவிரமான விஷயம்" என்று அவர் வர்ணித்தார்.
மெட்டாவின் உள்ளடக்க நிர்வாகக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை இது பிரதிபலிக்கிறது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெட்டா உலகளாவிய கொள்கைக் குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்கெனவே சம்மன் அனுப்பியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு