காணொளி: போலீஸ் தாக்கியதில் கோவில் பூசாரி உயிரிழப்பு என குடும்பத்தினர் புகார்
மதுரையைச் சேர்ந்த கோவில் பூசாரி போலீஸ் தாக்கியதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் கடந்த 16ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.
"ஒரு சாதாரண பிரச்னைக்காக தனது கணவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி, அவரது உயிரையே பறித்து விட்டனர்" என பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவின் படி, அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தான் தாக்கப்பட்டதை அடுத்து ஜூலை மாதம் 17-ஆம் தேதி, கணவர் பரமசிவம் சிந்தாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அன்று நள்ளிரவே காவல்நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து, புகாரை வாபஸ் பெற வேண்டும் என பரமசிவத்தை மிரட்டியதாகவும் அய்யம்மாள் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், ஜூலை 19ஆம் தேதி காலை வீட்டிற்கு சென்ற போலீசார், இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு பரமசிவத்தை தலையில் கடுமையாக தாக்கியதில் அவர் மயங்கியதாகவும் அய்யம்மாள் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர், காவலர்களே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு பரமசிவம் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மதுரை மாநகர காவல்துறை மறுத்துள்ளது.
பரமசிவம் தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பரமசிவம் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நீதித்துறை நடுவருக்கு திங்களன்று உத்தரவிட்டுள்ளது.
தனது தந்தையின் மரணத்திற்கு நீதிகிடைக்கும் வரை உடலை பெறப்போவதில்லை என பரமசிவத்தின் மகன் பிரபு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



