சௌகார் ஜானகி: தலைமுறைகள் கடந்து முத்திரை பதித்த 10 திரைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் சௌகார் ஜானகி எத்தனை தலைமுறை ரசிகர்களிடம் தன்னை புதுப்பித்துக் கொண்டார், எத்தனை விதமான கதாபாத்திரங்களில் நினைவில் நின்றார் என்பதை வைத்து அவரது சாதனைகளை அளவிட முடியும்.

அந்த வகையில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைப் பயணம் தனித்துவமானது. கதாநாயகியாக அறிமுகமாகி, குடும்பப் பெண், மாவட்ட ஆட்சியர், நகைச்சுவை கதாபாத்திரம், இரட்டை வேடம், தாய், பாட்டி எனப் பல்வேறு பாத்திரங்களில் நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தடம் பதித்தார்.

அவரது குறிப்பிடத்தக்க படங்களாக 'பாலும் பழமும்', 'புதிய பறவை', 'நீர்க்குமிழி', 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்', 'உயர்ந்த மனிதன்', 'இரு கோடுகள்', 'காவியத் தலைவி', 'தில்லு முல்லு' உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இயக்குநர் கே.பாலசந்தருடன் இணைந்த பிறகு, அதுவரை சோகமும் உணர்ச்சியும் நிறைந்த பாத்திரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட சௌகார் ஜானகி, நகைச்சுவை, கம்பீரம், அதிகாரம், நுணுக்கமான குடும்ப உணர்வுகள் என அவரது நடிப்பின் எல்லை பல புதிய பரிமாணங்களில் விரிவடைந்தது.

இப்படியாக, சௌகார் ஜானகியின் நடிப்புத் திறன் மற்றும் திரைப் பயணத்தின் முக்கிய கட்டங்களைப் புரிந்துகொள்ள உதவும் 10 திரைப்படங்களை இங்கு பார்ப்போம்.

1. ஷாவுக்காரு - பெயரையே மாற்றிய முதல் படம்

கடந்த 1950ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஷாவுக்காரு' திரைப்படம் சௌகார் ஜானகியின் திரைப் பயணத்திற்கான தொடக்கம் மட்டுமல்ல. அந்தப் படம் அவரது பெயரின் ஒரு பகுதியாகவே மாறியது.

எல்.வி.பிரசாத் இயக்கிய இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி தயாரித்தனர். என்.டி. ராமாராவ், எஸ்.வி. ரங்காராவ், ரெலங்கி உள்ளிட்டோருடன் ஜானகி சுப்புலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், ஜானகிக்கும் பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தியது. படத்தின் பெயரான 'ஷாவுக்காரு' அவருடன் இணைந்து, பின்னாளில் 'சௌகார் ஜானகி' என்றே அவர் அறியப்படத் தொடங்கினார்.

2. பாலும் பழமும் - நட்சத்திரங்கள் நிறைந்த குடும்ப நாடகம்

கடந்த 1961ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'பாலும் பழமும்' படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். சௌகார் ஜானகி இதில் நளினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிவாஜி கணேசன் - சரோஜா தேவி இணையை மையமாகக் கொண்ட கதை என்றாலும், குடும்ப உறவுகளில் உருவாகும் சிக்கல்களை நகர்த்தும் முக்கியமான பாத்திரமாக நளினி அமைந்தது.

அதோடு, நூறு நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடிய வெற்றிப் படமாகவும் 'பாலும் பழமும்' அமைந்தது. சௌகார் ஜானகியின் ஆரம்பக்கால படங்களில், பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடுவிலும் தனக்கென தனித்துவமான அடையாளத்தை சௌகார் ஜானகி உருவாக்கிக் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.

3. புதிய பறவை - சௌகார் ஜானகியின் புதிய பரிமாணம்

கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரில்லர் 'புதிய பறவை'யை தாதா மிராசி இயக்கினார். சிவாஜி கணேசனின் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜா தேவி, எம்.ஆர். ராதா, நாகேஷ், மனோரமா உள்ளிட்டோருடன் சௌகார் ஜானகி நடித்தார். சித்ரா, சரசா என இரு மாறுபட்ட அடையாளங்களைக் கொண்ட பாத்திரங்களில் அவர் தோன்றினார்.

சோகக் கதாபாத்திரங்களால் அடையாளப்படுத்தப்பட்டு வந்த ஜானகிக்கு, தனது திரை ஆளுமையின் வேறொரு பக்கத்தை வெளிப்படுத்திய படமாக இது அமைந்தது.

குறிப்பாக 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடல் இடம்பெறும் பகுதிகளில் அவரது திரைத் தோற்றமும் நடிப்பும் இன்று வரை நினைவுகூரப்படுகின்றன. அந்தப் படத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்த்து ஜானகியின் நடிப்பையும் அந்தக் கால விமர்சனங்கள் பாராட்டின.

4. நீர்க்குமிழி - கே. பாலசந்தருடனான முக்கிய தொடக்கம்

கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான 'நீர்க்குமிழி', கே.பாலசந்தர் திரைப்பட இயக்குநராக அறிமுகமான படம். ஏ.கே.வேலன் தயாரிப்பில் உருவான இந்தத் தமிழ் படத்தில் நாகேஷ், சௌகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி உள்ளிட்டோர் நடித்தனர். மருத்துவமனையை மையமாகக் கொண்ட கதையில் சௌகார் ஜானகி மருத்துவர் இந்திராவாக நடித்தார்.

நாகேஷ் நடித்த சேது கதாபாத்திரம் படத்தின் பிரதான ஈர்ப்பாக இருந்தாலும், சௌகார் ஜானகியின் திரைப் பயணத்தைப் பார்க்கையில் 'நீர்க்குமிழி'க்கு வேறொரு முக்கியத்துவமும் உள்ளது.

இதன் பின்னர் பாலசந்தரின் படங்களில் ஜானகியின் நடிப்புத் திறன் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கால விமர்சனங்களில் புதிய பாணியிலான திரைப்பட முயற்சியாக 'நீர்க்குமிழி' கவனிக்கப்பட்டது. ஜானகி - பாலசந்தர் கூட்டணியின் முக்கிய அத்தியாயங்களுக்குத் தொடக்கமாக அமைந்த படம் என்பதாலும் இந்தப் பட்டியலில் 'நீர்க்குமிழி' தவிர்க்க முடியாதது.

5. பாமா விஜயம் - குடும்ப நகைச்சுவையில் ஜானகி

கடந்த 1967ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'பாமா விஜயம்' படத்தை கே. பாலசந்தர் எழுதி இயக்கினார். மனோகர் பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.காசி தயாரித்தார்.

சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ, நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், டி.எஸ்.பாலையா என பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் இடம்பெற்றது. இதில் குடும்பத்தின் மூத்த மருமகளான பார்வதியாக சௌகார் ஜானகி நடித்தார்.

போலி கௌரவம், ஆடம்பரம், வருமானத்தை மீறிய செலவு ஆகியவற்றை நையாண்டி செய்த குடும்ப நகைச்சுவைப் படமாக அது அமைந்தது. படம் தமிழக அரசின் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கத்தின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது.

பின்னாளில் கிரேஸி மோகனும் 'பாமா விஜயம்' படத்தின் நகைச்சுவையை மிகவும் உயர்வாக மதிப்பிட்டார். ஜானகியின் நகைச்சுவைத் திறன் வளர்வதில் இந்தப் படத்திற்கு முக்கிய இடமுண்டு.

6. எதிர்நீச்சல் - 'பட்டு மாமி'யாக மறக்க முடியாத நடிப்பு

'எதிர்நீச்சல்' திரைப்படம் கே. பாலசந்தர் இயக்கத்தில் 1968ஆம் ஆண்டு வெளியானது. கலாகேந்திரா மூவிஸ் சார்பில் என்.செல்வராஜ், பி. துரைசாமி, என்.கிருஷ்ணன் தயாரித்த இந்தப் படத்தில் நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், ஜெயந்தி உள்ளிட்டோருடன் சௌகார் ஜானகி நடித்தார். அவரது 'பட்டு மாமி' கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இன்றளவும் நினைவுகூரப்படும் நகைச்சுவை பாத்திரங்களில் ஒன்றாக மாறியது.

சௌகார் ஜானகிக்கு அதுவரை கிடைத்து வந்த சோகமயமான பாத்திரங்களுக்கு முற்றிலும் மாறான கதாபாத்திரம் இது என்று பாலசந்தரே குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படத்தில் வரும் 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா' பாடலில் ஸ்ரீகாந்துடன் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை பாணியும் படத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. பின்னாளில் ஜானகியின் முக்கியமான ஐந்து நடிப்புகளைத் தேர்ந்தெடுத்த பட்டியல்களிலும் 'எதிர்நீச்சல்' இடம்பெற்றுள்ளது.

7. உயர்ந்த மனிதன் - வலுவான நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்தவர்

'உயர்ந்த மனிதன்' படத்தை 1968ஆம் ஆண்டு கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர். ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், வாணிஸ்ரீ, சிவகுமார் உள்ளிட்டோர் நடித்தனர். சௌகார் ஜானகி விமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிவாஜி கணேசனின் 125வது திரைப்படமான இது 125 நாட்களுக்கும் மேலாக ஓடி வணிக வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட விருதுகளும் கிடைத்தன. ஜானகி தனிப்பட்ட விருது எதையும் பெறாவிட்டாலும், பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் நடித்த படத்தில் விமர்சகர்களால் தனித்துக் கவனிக்கப்பட்ட நடிப்பு என்பதால் 'உயர்ந்த மனிதன்' அவரது முக்கியப் படங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

8. இரு கோடுகள் - சிறந்த நடிகைக்கான மாநில விருது

கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான 'இரு கோடுகள்' சௌகார் ஜானகியின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று.

கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தை என்.செல்வராஜ், பி.துரைசாமி, என்.கிருஷ்ணன் மற்றும் வி.கோவிந்தராஜன் தயாரித்தனர். ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்தனர். ஜானகி, கணவரைப் பிரிந்து தனியாக குழந்தையை வளர்த்து பின்னர் மாவட்ட ஆட்சியராக உயர்ந்த ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் அமைத்துவிட்டதை அறிந்தபோதும், தனது கண்ணியத்தையும் அதிகாரப் பொறுப்பையும் கைவிடாத பெண்ணின் மனநிலையை அவர் வெளிப்படுத்திய விதம் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்த நடிப்புக்காக சௌகார் ஜானகி தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.

திரைப்பட விமர்சகர் மாலதி ரங்கராஜனும் பின்னாளில் இந்த நடிப்பை ஜானகியின் குறிப்பிடத்தக்க சிறந்த நடிப்புகளில் ஒன்றாகப் பாராட்டியுள்ளார். சௌகார் ஜானகியின் கம்பீரமான நடிப்பைப் பார்க்க வேண்டுமெனில் 'இரு கோடுகள்' முதன்மையான தேர்வாக இருக்கும்.

9. காவியத் தலைவி - தயாரிப்பாளர் அவதாரம்

'காவியத் தலைவி' திரைப்படம் 1970ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படம், சௌகார் ஜானகிக்கு மிகவும் தனிப்பட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கே.பாலசந்தர் எழுதி இயக்கிய இந்தப் படத்தை சௌகார் ஜானகியே தயாரித்தார்.

ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், எம்.ஆர்.ஆர்.வாசு உள்ளிட்டோருடன் நடித்த அவர், தாய் - மகள் என இரண்டு வேறுபட்ட பாத்திரங்களில் நடித்தார். வங்க மொழித் திரைப்படமான 'உத்தர் ஃபல்குனி'யின் தாக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

படம் வெளியானபோது, ஜானகியின் இரட்டை வேட நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பின்னாளில் திரைப்பட வரலாற்றாசிரியர் மோகன் ராமனும் இதை ஜானகியின் விதிவிலக்கான சிறந்த நடிப்புகளில் ஒன்றாகக் குறிப்பிட்டார்.

சௌகார் ஜானகியுமேகூட தனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக 'காவியத் தலைவி'யை தேர்ந்தெடுத்திருந்தார். ஜெமினி கணேசனுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. ஒரு பெண் நடிகை தனது நடிப்புத் திறனை நம்பி தயாரிப்பாளராகவும் பொறுப்பு வகித்த படமாக 'காவியத் தலைவி' அவரது வாழ்க்கையில் தனி இடத்தைப் பெற்றது.

10. தில்லு முல்லு - தலைமுறை கடந்த நகைச்சுவை

இயக்குநர் கே. பாலசந்தர், 1981ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை இயக்கினார், விசு அதற்கு திரைக்கதை எழுதினார்.

கலாகேந்திரா மூவிஸ் சார்பில் பி.ஆர். கோவிந்தராஜன் மற்றும் ஜே. துரைசாமி தயாரித்தனர். ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், பூர்ணம் விஸ்வநாதன், மாதவி உள்ளிட்டோருடன் சௌகார் ஜானகி நடித்தார்.

இதில் அவர் நடித்த மீனாட்சி துரைசாமி கதாபாத்திரமே தனித்துவமான நகைச்சுவையைக் கொண்டிருந்தது. திரைப்படத்திற்குள் இருக்கும் சௌகார் ஜானகியின் தோற்றத்தைப் போன்ற ஒரு சமூகப் பிரமுகராக வரும் அவர், ரஜினி நடித்த கதாபாத்திரத்திற்கு போலி அம்மாவாக நடிக்க சம்மதிப்பார்.

தேங்காய் சீனிவாசனிடம் அந்த நாடகம் வெளிப்பட்டுவிடும் பகுதிகள் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளாக மாறின. அனுபவமிக்க நடிகையால் மட்டுமே அந்தக் காட்சியின் நகைச்சுவையை இயல்பாகக் கொண்டு செல்ல முடியும் என்று அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.

'தில்லு முல்லு' படத்தின் மற்றொரு முக்கியத்துவம், 1950களில் கதாநாயகியாக பயணத்தைத் தொடங்கிய சௌகார் ஜானகி, 1980களில் ரஜினிகாந்த் தலைமுறையிலும் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். அதுவே அவரது நீண்ட திரைப் பயணத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

இந்த 10 படங்களையும் ஒரே வரிசையில் பார்க்கும்போது சௌகார் ஜானகியின் நடிப்புப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

'ஷாவுக்காரு'வில் இளம் கதாநாயகியாகத் தொடங்கியவர், 'புதிய பறவை'யில் மர்மமான திரை ஆளுமையாக மாறுகிறார். 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்' ஆகிய படங்களில் தனது நகைச்சுவைத் திறனை நிரூபித்து, 'இரு கோடுகள்' படத்தில் அதிகாரமும் மன வலிமையும் கொண்ட பெண்ணாகச் சிறந்த நடிகைக்கான மாநில விருதைப் பெறுகிறார்.

அதைத் தொடர்ந்து 'காவியத் தலைவி' படத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்ததுடன், இரட்டை வேடத்திலும் நடித்து தனது எல்லைகளை விரிவுபடுத்தினார். அதுமட்டுமின்றி 'தில்லு முல்லு'வில் தொடங்கி, சமகாலத்தில் தம்பி, பிஸ்கோத் போன்ற படங்கள் வரை எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் தனது நடிப்பை ரசிக்க வைக்க முடியும் என்ற தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு