பொருளாதார அழுத்தம் இருந்தாலும் இரான் போரை தொடர்வது ஏன்? எவ்வளவு காலம் நீடிக்கும்?

2025 நவம்பர் 12 அன்று தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் டிரோன் சாதனைகளைக் காட்சிப்படுத்திய கண்காட்சியைப் பார்வையிடும் இரானியர்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

    • எழுதியவர், சயீத் ஜஃபரி
    • பதவி, பிபிசி நியூஸ் பெர்ஷியன் அரசியல் ஆய்வாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பின் மீது மிகப்பெரிய அழுத்தம் நிலவினாலும், அதை முடிவுக்குக் கொண்டுவருவதில் அந்நாட்டில் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் அவசரம் காட்டவில்லை.

போரின் வேகத்தை அமெரிக்கா மட்டுமே தீர்மானிக்க முடியாது என்பதை இரான் நிரூபிக்க விரும்பக்கூடும். அதேவேளையில், அமெரிக்காவுக்கான ராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் செலவுகளை அதிகரித்து, இறுதியில் அமெரிக்காவை தனது சில கோரிக்கைகளை ஏற்கும் நிலைக்கு கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையும் அதற்கு இருக்கலாம்.

ஆனால் இதற்கெல்லாம் மையமாக இருக்கும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இரான் உண்மையில் இந்தப் போரை எவ்வளவு காலம் தொடர முடியும்?

ராணுவ ரீதியாக போரை நீட்டிக்கும் திறன் இரானுக்கு எவ்வளவு உள்ளது?

2026 மார்ச் 31 அன்று தெஹ்ரானில், இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியை கௌரவிக்கும் பதாகையின் கீழ் நிறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படை வாகனத்தை கடந்து செல்லும் பெண்கள். போர் தொடங்கியபோது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் காமனெயி கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

இரானின் பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்களின் சில பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஆனால் சேதத்தின் அளவை மதிப்பிடும் சுயாதீனமான கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை. சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, தற்போது இரானிடம் எவ்வளவு ஏவுகணை கையிருப்பு உள்ளது என்பதற்கான நம்பகமான கணிப்பு எதுவும் இல்லை.

இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் அலைகள் காலப்போக்கில் சிறியதாக மாறியுள்ளன. ஆனால் போரைத் தொடரும் திறன் என்பது ஏவுகணைகளின் எண்ணிக்கையால் மட்டும் அளவிடப்படுவதில்லை. ட்ரோன்களும் க்ரூஸ் ஏவுகணைகளும் ஒப்பீட்டளவில் எளிதாகவும் வேகமாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை கொல்லப்பட்ட தளபதிகளுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டளை அமைப்பும் அப்படியே செயல்பட்டு வருகிறது.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவியல் விரிவுரையாளரான முகம்மது கயேதி, பிபிசி நியூஸ் பெர்ஷியனிடம் கூறுகையில், "இரான் நீண்ட காலத்துக்கு தாக்குதல்களை நடத்தும் திறனைத் தக்கவைத்திருக்க முடியும். எனினும் அதன் தீவிரம் குறைந்திருக்கலாம். அதேபோல் ஹோர்மூஸ் நீரிணையில் அது தொடர்ந்து இடையூறுகளையும் ஏற்படுத்த முடியும்" என்றார்.

நீடித்த மோதல் அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இரானில் முடிவெடுக்கக் கூடியவர்கள் கருதுகின்றனர்.

இரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க அமெரிக்கா தனது பாதுகாப்பு ஆயுதக் கையிருப்பில் உள்ள சில வளங்களை ஏற்கெனவே பயன்படுத்தியுள்ளது. அந்த ஆயுதங்களை விரைவாக மாற்றீடு செய்ய முடியாது என்று சில அமெரிக்க மதிப்பீடுகள் எச்சரித்துள்ளன. மேலும், "எண்ணெய் விலைகளின் மீது போரின் தாக்கமும், அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலும், வாஷிங்டனை தனது சில நிபந்தனைகளை ஏற்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தெஹ்ரானில் உருவாக்கியுள்ளன" என்றும் கயேதி கூறுகிறார். உள்நாட்டில், குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்ற ஆதரவு ஒப்பீட்டளவில் வலுவாக உள்ளது, ஆனால் கருத்துக் கணிப்புகள் மோதலுக்கு அமெரிக்கர்களின் எதிர்ப்பையும், டொனால்ட் டிரம்ப் தனது போர் இலக்குகளை அடையவில்லை என்ற கவலையையும் தொடர்ந்து காட்டுகின்றன.

இரானின் கணிப்பு சரியானதாக இருந்தால், அமெரிக்காவை ராணுவ ரீதியில் தோற்கடிப்பதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, நீண்டகாலம் நீளும் அதிகச் செலவுடைய போரே அழுத்தம் அளிப்பதற்கு ஒரு வழியாக மாறலாம். இப்போதைக்கு, ராணுவ வரம்புகள் மட்டுமே இரானைப் போரை நிறுத்த நிர்பந்திக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இரானின் பொருளாதாரம் எவ்வளவு காலம் தாங்கும்?

2026 மே 16 அன்று இரானின் லாரக் தீவுக்கு அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களின் பின்னணியில் பறக்கும் இரானியக் கொடி.

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

போர் தொடங்குவதற்கு முன்பே, இரானின் பொருளாதாரம் அதிக பணவீக்கம், முதலீட்டு பற்றாக்குறை, ரியால் நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டது. உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2025-26 நிதியாண்டில் இரானின் பொருளாதாரம் சுமார் 2.7% சுருங்கியது. அதில் இறுதி சில வாரங்களே போர்காலத்துடன் ஒத்துப்போனவை.

போர் புதிய அழுத்தங்களையும் உருவாக்கியுள்ளது. இரானின் புள்ளிவிவர மையத்தின் தரவுகளின்படி, 12 மாத பணவீக்கம் 62% ஆக உயர்ந்துள்ளது. போரின் தாக்கத்துக்கு அதிகமாக உள்ளான தெற்கு மாகாணங்களில் இந்த அழுத்தம் மிகவும் கடுமையாக இருந்தது. உதாரணமாக, ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் பணவீக்கம் 101%-ஐத் தாண்டியது.

வேலைவாய்ப்பு சந்தையிலும் போர் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரானின் துணை தொழிலாளர் அமைச்சர் கூறுவதன்படி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன; சுமார் 20 லட்சம் பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை இழந்துள்ளனர்.

2026ஆம் ஆண்டில் இரானின் பொருளாதாரம் சுமார் 5.4% அளவுக்கு சுருங்கும் என்றும், பணவீக்கம் 69%-ஐ நெருங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

போர் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதையும், வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பின் அளவையும் பொறுத்தே அதன் தாக்கம் பெருமளவில் அமையும். இரானுக்கு ஹோர்மூஸ் நீரிணை அழுத்தம் தருவதற்கு ஒரு கருவியாகவும் அதே நேரத்தில் ஒரு பலவீனப் புள்ளியாகவும் உள்ளது. இந்தப் பாதையில் ஏற்படும் இடையூறுகள் அமெரிக்காவுக்கும் உலக எரிசக்தி சந்தைக்கும் செலவினை அதிகரிக்கக்கூடும். ஆனால், அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள், எண்ணெய் ஏற்றுமதி செய்வதை இரானுக்கே கடினமாக்குகின்றன.

ஆனால், பொருளாதார அழுத்தம் மட்டும் ஏற்பட்டதால் நிலைமையில் மாற்றம் ஏற்படும் என்பது உறுதியல்ல.

மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலும் அதிகாரமைய ஆட்சிகள் பல ஆண்டுகள் நீடித்து நிலைத்திருக்க முடியும் என்று கயேதி கூறுகிறார். அவரது பார்வையில், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை மக்களின் அதிருப்தியை அதிகரிக்கக்கூடும். ஆனால் பரவலான மக்கள் போராட்டங்கள் அல்லது அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஏற்படாத வரை, அவை இரானின் ராணுவக் கொள்கையை மாற்றாது.

தெஹ்ரானில் கருத்து வேறுபாடு: போர் எவ்வளவு காலம் தொடர வேண்டும்?

2026 மார்ச் 27 அன்று அதிகாலையில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகள் அருகே செல்போனில்  பேசும் பெண்.

பட மூலாதாரம், Getty Images

அடுத்தகட்டமாக எப்படிச் செல்ல வேண்டும் என்பதில் இரான் ஒருமித்த கருத்தில் இல்லை.

நாடாளுமன்றத் தலைவர் மற்றும் இரானின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரான முகமது பாகர் காலிபாஃப், இரான் "சோர்வூட்டும் நீண்டகால மோதல்களில்" சிக்கிக் கொள்ளக் கூடாது என்று முன்பே எச்சரித்திருந்தார். பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக இருப்பவர்களையும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால், தெஹ்ரானைச் சேர்ந்த கடுமையான நிலைப்பாட்டுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்ஹொசைன் சபெதி, அமெரிக்கா இரானின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் போர் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இந்த கருத்து வேறுபாட்டை "போருக்கு ஆதரவானவர்கள்" மற்றும் "அமைதிக்கு ஆதரவானவர்கள்" என்ற எளிய பிரிவுகளாகப் பார்க்க முடியாது. காலிபாஃப் கூட, இரானின் உரிமைகளை உறுதி செய்யாத எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தம், தெஹ்ரானுக்கு எந்த அளவுக்கு அதிக செல்வாக்கை உருவாக்கும், மேலும் ஒரு கட்டத்தில் அதன் செலவுகள், அதனால் கிடைக்கும் பலன்களைவிட அதிகமாகத் தொடங்கும் என்பதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது.

பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? போரைத் தொடர்வது குறித்து அவர்களின் நிலைப்பாட்டை அளவிடும் சுயாதீனமான மற்றும் நம்பகமான கருத்துக்கணிப்பு எதுவும் இல்லை. சமூக ஊடகங்களும் முழுச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. பிபிசிக்கு அளித்த பேட்டியில், இரான் விவகார நிபுணரும் ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் நிறுவனத்தின் வருகை ஆய்வாளருமான ஹமித்ரெசா அசிசி, "இஸ்லாமியக் குடியரசுக்கு மிகவும் ஆபத்தான முன்னணி, இறுதியில் உள்நாட்டு முன்னணியாக இருக்கலாம்" என்று கூறுகிறார். கடுமையான பணவீக்கம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பின் மீது அதிகரித்துள்ள அழுத்தம் ஆகியவையே அதற்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.

வெளியேறும் திட்டம் தேவைப்படும் ஒரு போர்

2026 மார்ச் 3 அன்று, முந்தைய நாள் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த காவல் நிலையத்தின் இடிபாடுகளில் நாட்டப்பட்டுள்ள இரானியக் கொடி

பட மூலாதாரம், Getty Images

சமீப ஆண்டுகளில், குறிப்பாக செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா அரபு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த இரான் முயன்றுள்ளது. இந்த நாடுகளில் உள்ள தளங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அந்த முன்னேற்றம் பின்னுக்குத் தள்ளப்படலாம்.

இதுவரை இந்த நாடுகள் பதற்றத்தைக் குறைத்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்ற அணுகுமுறையையே கடைப்பிடித்துள்ளன. ஆனால் தாங்கள் இரான் அல்லது அதனுடன் இணைந்த சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆளாகிறோம் என்ற உணர்வு அதிகரித்தால், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் உருவாகலாம். அது இறுதியில் இரானுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.

நீடித்த போரின் மூலம் அமெரிக்கா மீது உருவாக்கும் அழுத்தத்தை பேச்சுவார்த்தை மேசையில் சலுகைகளாக மாற்ற முடிந்தால் மட்டுமே இரானுக்கு அரசியல் மதிப்பு கிடைக்கும். போரை இரான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும், அல்லது அது எவ்வாறு உருவாகும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

"போரின் போது பெற்ற பேச்சுவார்த்தை பலத்தை எவ்வாறு நீடித்த அரசியல் உடன்பாடாக மாற்றப்போகிறது என்பதற்கான தெளிவான விளக்கம்தான் இரானின் உத்தியில் தற்போது இல்லாத ஒன்று" என்று அசிசி கூறுகிறார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கவும், அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் செலவுகளை ஏற்படுத்தவும் முடியும் என்பதை இரான் நிரூபித்துள்ளது. ஆனால் அமெரிக்காவுடனும் வளைகுடா நாடுகளுடனும் நிரந்தர மோதல் நிலையில் அது எவ்வாறு தொடர்ந்து இருக்க முடியும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை உள்ளது."

இதுவரை, ராணுவ, பொருளாதார அல்லது அரசியல் வரம்புகளில் எதுவும் இரான் போரைத் தொடர்வதைத் தடுக்கவில்லை. ஆனால் போர் நீடிக்கும் அளவுக்கு உள்நாட்டு பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும், பிராந்திய உறவுகள் மேலும் பாதிக்கப்படும். மேலும் அந்தச் செலவுகளை ஈடுகட்டக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சவாலாக மாறும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு