இந்திய அணியில் மீண்டும் சர்ஃபராஸ் கான்: ஆடும் லெவனில் இடம் பெற சவாலாக இருப்பது யார்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"நான் இதில் முழுமையாகப் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் இருப்பதையெல்லாம் வைத்து முழு வலிமையுடன் போராடுவேன்."

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் சேர்க்கப்படாத போது சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த பதிவைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்தது.

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

வலது காலின் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாய் சுதர்சன் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்சலன்ஸில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பிசிசிஐயின் தகவலின்படி, அவரது குணமடையும் நிலை திருப்திகரமாக உள்ளது.

தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலியில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் கொழும்புவிலுள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும்.

நவம்பர் 2024-ல் கடைசியாக டெஸ்டில் சர்ஃபராஸ்கான் விளையாடினார்

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியா புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஒன்பது போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சர்ஃபராஸ் கான் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில் அவர் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்திருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவற்றில் ஒன்றில், தனது தந்தையுடன் அவர் நிற்பது காணப்படுகிறது.

இந்த பதிவிற்கு அவர் எந்த விளக்கக் குறிப்பையும் எழுதவில்லை. இந்திய தேசியக் கொடியை உள்ளடக்கிய சில எமோஜிகளை மட்டும் பயன்படுத்தியிருந்தார்.

சர்ஃபராஸ் சுமார் இரண்டு ஆண்டுகளாக அணிக்குத் திரும்பும் வாய்ப்புக்காக காத்திருந்தார். அவர் கடைசியாக நவம்பர் 2024-ல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

"சர்ஃபராஸ் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட காலமாக முதல் தர கிரிக்கெட்டில் 65-க்கும் அதிகமான சராசரியில் ரன்கள் எடுத்த வீரர், 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம், மூன்று அரைசதங்கள் அடித்திருப்பவர் அணியில் இடம் பெறுவதற்காக தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும். அவரைவிட குறைவான திறமைகளை கொண்ட சிலர் அதிக வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம். குறிப்பாக துணைக்கண்ட சூழ்நிலைகளில் சர்ஃபராஸ் ஒரு நல்ல தேர்வாக இருப்பார். நீங்கள் இதை ஏற்கிறீர்களா?" என மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்ஃபராஸின் சாதனைகள்

சர்ஃபராஸ் கான் 2024ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 37.1 சராசரியில் மொத்தம் 371 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒரு சதமும் மூன்று அரைசதங்களும் அடித்துள்ளார்.

ஐபிஎல்லில் அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக உள்ளார். 2015 முதல் ஐபிஎலில் விளையாடி வரும் அவர், இந்த வடிவத்தில் 58 போட்டிகளில் 22.6 சராசரியில் 746 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 137.4 ஆகும்.

எனினும், 2024-25 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில்கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் அவர் இடம்பெறவில்லை.

2025 ரஞ்சி டிராபி தொடரில், மும்பைக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்தார். ஏழு போட்டிகளில் 53.62 சராசரியில் 429 ரன்கள் எடுத்திருந்தார். குறைந்தது 50 முதல் தர இன்னிங்ஸ்கள் விளையாடிய வீரர்களில், அவரது 64.73 முதல் தர சராசரி மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகும்.

இந்திய அணி வீரர்கள் காயங்களால் அவதி

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பே இந்திய அணியை காயம் வாட்டுகிறது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

கேப்டன் சுப்மன் கில், இலங்கை கிரிக்கெட் லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் கில் பேட்டிங் செய்து, 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸின் உதவியுடன் இந்தியா ஆட்டத்தின் கடைசி நாளில் இலக்கை எட்டியது.

"இது வேறு எந்த காரணத்தையும் விட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கப்பட்ட முடிவு. கில் முற்றிலும் நலமாக உள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முதல் நாளில் அவரை களமிறக்க வேண்டாம் என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. டெஸ்ட் போட்டிக்காக அவர் முழுமையாக தயாராக இருக்கிறார்" என போட்டிக்குப் பிறகு பகுதுலே கூறினார்.

ஆடும் லெவனில் இடம் பெற சவாலாக இருப்பது யார்?

அணியில் சேர்க்கப்பட்டதால் மட்டுமே சர்ஃபராசுக்கு ஆடும் லெவனில் இடம் உறுதி ஆகிவிடாது. அணியில் இடம் பெறுவதற்காக அவர் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கை லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த தேவதத் படிக்கல், அணியில் இடம்பிடிக்கும் போட்டியில் தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயல்பாடு, மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அணித் தேர்வாளர்களுக்கு மேலும் ஒரு தெரிவை வழங்கியுள்ளது.

சர்ஃபராஸின் பக்கம் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் உள்ளது. அதோடு, உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவரது சாதனைகள் மிகவும் வலுவானவை.

ஆனால் படிக்கல் இந்த தொடரை ஒரு பெரிய சதத்துடன் வரவேற்கிறார். அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்தியாவின் முன்வரிசையில் இடது கை - வலது கை கூட்டணியையும் உருவாக்க முடியும். இது அணிக்கு சாதகமாக இருக்கலாம். எனவே, மூன்றாவது இடத்திற்கான போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு