காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் செய்து முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அந்த அமெரிக்கத் தூதரக அதிகாரியை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது இந்தியாவின் ஒரு முக்கியமான பகுதியாகும்" என்று கூறினார்.
செர்ஜியோ கோரின் பயணத்தைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகப் பொறுப்பாளரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , "இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் இன்று வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்குள்ள நிலைமை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்த உண்மைக்குப் புறம்பான கூற்றுகளுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது .
"ஜம்மு காஷ்மீரை 'இந்தியாவின் ஒரு பகுதி' என்று குறிப்பிடுவதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிப்பதுடன், திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசம் என்றும், அது தொடர்புடைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இறுதி தீர்வு காணப்பட வேண்டியுள்ளது என்றும் பாகிஸ்தான் வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா, ஜம்மு காஷ்மீரைத் தனது பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுகிறது, அதேசமயம் பாகிஸ்தான் இவ்விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
சமீப காலமாக, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான உறவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இரான் மற்றும் அமெரிக்கா இடையே 60 நாள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்தது.
அமெரிக்கத் தூதர் என்ன கூறினார்?

பட மூலாதாரம், @OmarAbdullah
செர்ஜியோ கோர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, அமெரிக்க தூதர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்ட செர்ஜியோ கோர், புதன்கிழமை அன்று முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுடன் எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
அதில், "ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைச் சந்தித்து, அவரது முன்னுரிமைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்குத் தெரியும், நான் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர். இது இந்தியாவின் ஒரு முக்கியமான பகுதி. நான் இங்கு வருவது இதுவே முதல் முறை" என்றார்.
"இது ஒரு அழகான இடம். இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த இடத்தைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இப்போது தான் ஒரு சிறப்பான சந்திப்பை நடத்தினோம். சில தொடர் நடவடிக்கைகள் உள்ளன. அவற்றை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம். சந்திப்பு மிகவும் அன்பு நிறைந்ததாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. இந்த உறவைத் தொடர்ந்து வலுப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை தனது குடிமக்களுக்குப் பல்வேறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை வழங்குகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தியாவுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஆனால் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 4-ம் நிலை பயண எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுக் கலவரம் குறித்த அச்சம் காரணமாக, ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் பயண எச்சரிக்கை குறித்தும் செர்ஜியோ கோர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் , "அமெரிக்கா பயண எச்சரிக்கைகளை வெளியிடுகிறது, மேலும் நாங்கள் அந்தப் பயண எச்சரிக்கைகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்கிறோம். இன்று என்னால் இங்கு பெரிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாது, ஆனால், இது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்று கூறினார்.
"இந்தியா, முதலமைச்சர் மற்றும் இங்குள்ள அரசு ஆகியோருடன் இணைந்து, இந்தப் பகுதியைப் பாதுகாப்பாகவும், மேலும் வலுவாகவும் மாற்ற சில சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, அமெரிக்கா பரிந்துரைத்துள்ள இந்தப் பயண எச்சரிக்கையைத் தளர்த்த வேண்டுமா என்பதைப் பார்ப்போம். இது ஒரு அழகான பகுதி. இங்கு வந்து அதன் அழகையும் வாய்ப்புகளையும் பார்க்க பல அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஒமர் அப்துல்லா என்ன கூறினார்?

பட மூலாதாரம், @OmarAbdullah
செர்ஜியோ கோர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தபோது, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவும் அவருடன் இருந்தார்.
முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசினார். வரும் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் ஆழமடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இது மிகவும் சிறப்பான சந்திப்பாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீருடன் அமெரிக்கா எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்தும் பேசினோம்.
"நிச்சயமாக, இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் சில பிரச்னைகள் உள்ளன. அவற்றை காலப்போக்கில் தீர்க்க முயற்சிப்போம். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.
"இந்தப் பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தூதர் கோருக்கும் எனக்கும் இடையிலும், புதுடெல்லியில் எனக்கும் இந்திய அரசுக்கும் இடையிலும் நடைபெறும்.
ஆனால், வரும் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான தொடர்பு மேலும் வளர்ந்து, ஆழமடையும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
ஒமர் அப்துல்லா, செர்ஜியோ கோருடன் எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இன்று ஸ்ரீநகரில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
"ஜம்மு காஷ்மீருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்பை குறிப்பாக சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் புதிய பொருளாதாரம் போன்ற துறைகளில் விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் மிகவும் நல்ல உரையாடலை மேற்கொண்டோம்.
"இந்தத் தொடர்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், எங்களது பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டார்.
இந்தச் சந்திப்புக்கு முன்பு, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "எங்களுடைய பிரச்னைகளுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேறு எந்த நாட்டிடமும் புகார் தெரிவிப்பது எனது வழக்கமும் அல்ல . அமெரிக்கா எங்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியதில்லை. எங்களுடைய மத்திய அரசு தான் எங்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். வேறொரு நாட்டின் தூதரிடம் எனது நாட்டைப் பற்றி நான் புகார் தெரிவிப்பது மிகவும் தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகள்

பட மூலாதாரம், ANI
செர்ஜியோ கோர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
செர்ஜியோ கோர் 'இணைந்த' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'முக்கியமான' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினார் என்பது குறித்து பத்திரிகையாளர் ராகுல் சிவசங்கர் விளக்கியுள்ளார்.
"தூதர்கள் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்வார்கள். செர்ஜியோ கோர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர். ஆனால், அவர் அதைவிட மிகப் பெரிய பொறுப்பையும் வகிக்கிறார். அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராகவும் உள்ளார். எனவே, அவர் 'முக்கியமான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அதற்கு இன்னும் அதிகமான அர்த்தம் உள்ளது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செர்ஜியோ கோரின் பயணத்துக்கு முன்பு, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் (PDP) மெஹபூபா முஃப்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்யக்கூடிய குறைந்தபட்ச விஷயம், காஷ்மீருக்குப் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர்நிலை பயண எச்சரிக்கையை மறுபரிசீலனை செய்து, அதைத் திரும்பப் பெறுவதுதான்" என்று அதில் கூறியிருந்தார்.
"ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுற்றுலாவைச் சார்ந்து வாழும் காஷ்மீருக்கு, காஷ்மீர் தொடர்பான பயண எச்சரிக்கை என்பது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல. அது காஷ்மீருக்கும் உலகத்துக்கும் இடையிலான ஒரு சுவர்."
"அதை நீக்குவது வலுவான நம்பிக்கையை அளிக்கும் ஒரு செய்தியை அனுப்பும். சர்வதேச சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவழைக்க உதவும். மேலும், சுற்றுலாவைச் சார்ந்து வாழும் எண்ணற்ற குடும்பங்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தையும் வழங்கும்" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
செர்ஜியோ கோரின் கருத்து குறித்து இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வல் சிபல் கூறுகையில், "'இந்தியாவின் முக்கியமான பகுதி' என்பது வரவேற்கத்தக்க அரசியல் உறுதிப்படுத்தல். ஆசிம் முனீர் மற்றும் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் இதன் முக்கியத்துவத்தை கவனித்திருப்பார்கள். பாகிஸ்தானின் எதிர்வினை என்ன என்பதைப் பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்கு முன்பு ஒமர் அப்துல்லா தெரிவித்த கருத்து குறித்தும் கன்வல் சிபல் கூறியுள்ளார்.
"ஜம்மு காஷ்மீருக்கு சர்வதேச அரசியல் ரீதியான சுமை உள்ளது. இதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்துள்ளது. டிரம்ப் தலையிட முயன்றது தொடர்பாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மூலம் அமெரிக்கா நமது நாட்டின் நலன்களுக்கு எதிரான எந்தவொரு செயல்திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் முன்பே கூறியது முற்றிலும் சரியானது."
பாகிஸ்தான் குறித்த விவாதம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்ந்து பெரும் பதற்றத்துக்குக் காரணமாக இருந்து வருகிறது.
சமீபத்தில், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு குறித்தும் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. செர்ஜியோ கோரின் பயணம் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தெற்காசிய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "அமெரிக்க-இந்திய உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது. காஷ்மீர் தொடர்பாக கோர் தெரிவித்த கருத்துகள் உண்மையில் அமெரிக்காவின் கொள்கையைப் பிரதிபலிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கருத்துகள் இந்தியாவில் நிச்சயமாக வரவேற்கப்படும்.
"இந்த உறவுக்கு புதிய ஊக்கம் தேவைப்படும் நேரத்தில், அது கிடைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். அதேவேளையில், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு உண்மையில் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் நேரத்தில், காஷ்மீர் தொடர்பாக அமெரிக்க தூதர் தெரிவித்த கருத்துகள் இஸ்லாமாபாத்திலோ அல்லது ராவல்பிண்டியிலோ வரவேற்கப்படாது என்று நினைக்கிறேன்.
"இது அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுக்கு சற்று எதிர்பாராத பின்னடைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால், இந்தப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்க தூதரகம் என்ன கூறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நாம் அவசரமாக எந்த முடிவுக்கும் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
"ஆனால், கடந்த சில மணி நேரங்களில் காஷ்மீர் பயணம் தொடர்பாக உருவாகியுள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது, இருதரப்பு உறவுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை இது வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்."

பட மூலாதாரம், @USAmbIndia
இந்தோ-பசிபிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சர்வதேச விவகாரங்கள் நிபுணரான டெரெக் ஜே. கிராஸ்மேன், ஒமர் அப்துல்லாவின் பதிவை மறுபதிவு செய்து, "தூதர் கோர் இன்று ஜம்மு காஷ்மீருக்குச் சென்றுள்ளார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஊக்கமாகும். ஆனால், பிரச்னை என்னவென்றால், அவரது மேலதிகாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க விரும்பலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசியல்வாதி நபீல் கபோல் எக்ஸ் தளத்தில், "அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஸ்ரீநகருக்குச் சென்றது, காஷ்மீரின் வரலாறு மற்றும் கள யதார்த்தம் குறித்த அவரது புரிதலில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
உணர்வுபூர்வமான இந்தப் பகுதிக்கு அவர் வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட விளக்கத்தில் தீவிரமான குறைபாடுகள் இருந்ததை அவரது கருத்து வெளிப்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. மேலும், 47, 51, 80, 91, 98, 122, 123 மற்றும் 126 ஆகிய தீர்மானங்களின் கீழ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்டத்தில் அது தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
எனவே, தூதர் ஐ.நா. பதிவுகளையும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் ராணுவக் கண்காணிப்புக் குழு (யூஎன்எம்ஓஜிஐபி- UNMOGIP) வரலாற்றையும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரின் வரலாறு குறித்த அறியாமை, தூதரக நடவடிக்கைக்கு மாற்றாக இருக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"இரான் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட்டது, சௌதி அரேபியா மற்றும் துருக்கியுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் காரணமாக பாகிஸ்தான் தனது நம்பிக்கையில் ஒரு ஊக்கத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
"ஆனால், மிகப்பெரிய உலக அரசியல் விளையாட்டில், இறுதி முடிவை எப்போதும் உலக வல்லரசுகளே தீர்மானிக்கின்றன. இந்த நிலையில், புதிய கூட்டணிகளை உருவாக்கவும், பிராந்திய அரசியலில் தலையிடவும் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்பது போல் தெரிகிறது" என்று ஆஸ்திரிய-பல்கேரிய உலக அரசியல் மூலோபாய நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான வெலினா சக்கரோவா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































