சிங்கப்பூரில் சிறுமி தலையை தொட்டதற்காக தாக்கப்பட்ட முதியவர்: ஆதரவாக கடைக்கு திரண்ட மக்கள் - என்ன நடந்தது?

- எழுதியவர், கோ ஈவ் மற்றும் கெல்லி என்ஜி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சிங்கப்பூரில் உள்ள உணவு வளாகம் ஒன்றில் சிறுமியின் தலையை தொட்ட முதியவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு வளாகத்தில் சிறுமியின் தலையை முதியவர் ஒருவர் தொட்டத்தை தொடர்ந்து, அந்தச் சிறுமியின் தந்தை என நம்பப்படும் ஒருவர் ஆத்திரமடைந்து, 73 வயதான அந்த முதியவரைத் தள்ளியுள்ளார்.
சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் செக்யூரிட்டி கேமரா காட்சிகள் வார இறுதியில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. பெற்றோரின் அனுமதியின்றி முதியவர் குழந்தையைத் தொட்டிருக்கக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். எனினும், பெரும்பாலானோர் தலையில் தொட்டதற்காக உடல் ரீதியாகத் தாக்கியது அளவுக்கு அதிகமான எதிர்வினை என்று தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 40 வயது நபரை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
"இந்தச் சம்பவம் அல்லது அதன் பின்னணி குறித்து ஊகங்கள் தெரிவிக்க வேண்டாம்" என்றும், போலீசார் "விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான உண்மைகளை உறுதி செய்ய" அனுமதிக்குமாறும் பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவு வளாகத்தில், சிறுமி அமர்ந்திருந்த மேசையைக் கடந்து செல்லும்போது முதியவர் அவரது தலையை தொடும் காட்சிகள் வெளியாகியுள்ள ஒரு காணொளியில் இடம்பெற்றுள்ளன.
அதே மேசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், சிறுமியின் தாய் என நம்பப்படும் நிலையில், உடனடியாக அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, சிறுமியின் தந்தை என நம்பப்படும் நபர் மேசையை நோக்கி வந்து, அந்த முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடும் வாக்குவாதம் நடந்தது போல் தெரிந்த நிலையில், இளைய நபர் அந்த முதியவரின் கையைப் பிடித்து, கீழே தள்ளிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த முதியவர் யியோ சாங் கூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த உணவு வளாகத்தில் உள்ள 'பெய்-இங் வான்டன் நூடுல்' என்ற கடையை நடத்தி வருகிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யியோவுக்கும், அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் சிறிய உணவுக் கடைக்கும் பலரும் ஆதரவு தெரிவித்தனர். திங்கள்கிழமை பிபிசி அங்கு சென்றபோது, கடையின் முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. ஒரு கிண்ணம் நூடுல்ஸுக்காக வாடிக்கையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனர்.
கடையின் முன்பகுதியில் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்துக்கொண்டிருந்த யியோ, இந்தச் சம்பவம் குறித்து மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மறுத்தார். "இந்த அளவுக்கு கவனம் கிடைப்பது என்னை மிகவும் பாதித்துவிட்டது," என்று அவர் கூறினார்.
"அடுத்த முறை பேசலாம். இப்போது எனக்கு மிகவும் தலைசுற்றுகிறது," என்றார் அவர்.
பல வாடிக்கையாளர்கள் அவர் நலமாக இருக்கிறாரா என்று கேட்டறிந்தனர். சிலர் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடை மூடப்பட்டிருக்கும் என்று கடையின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யியோவின் குடும்பத்தினர், அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு கோரி, வார இறுதியில் கடையின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தனர்.
அந்தப் பதிவில், யியோ "70 வயதைக் கடந்தவர் என்றும், ஏற்கெனவே கால் மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் இருந்ததாகவும்" குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல அவர் விரும்பவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"அதன்பிறகு அந்த நபர் என் தந்தையுடன் அமர்ந்து மன்னிப்பு கேட்டதுடன், அவருக்கு ஒரு பானத்தையும் வழங்கினார். அவர் இறுதியில் மன்னிப்பு கேட்டதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என் தந்தைக்கு தற்போது கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. ஒரு பானமும் மன்னிப்பும் அவர் அனுபவிக்கும் உடல் வலி அல்லது காயங்களைப் போக்கிவிட முடியாது," என்று யியோவின் மகன் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அந்த உணவுக் கடையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின்படி, சம்பவத்துக்குப் பிறகு யியோ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, சிங்கப்பூர் செய்தி நிறுவனமான சேனல் நியூஸ் ஏஷியாவிடம் பேசிய யியோ, அந்தச் சிறுமி "மிகவும் அழகாக இருந்ததால்" அவரது தலையைத் தொட்டதாகக் கூறினார்.
"வயதானவர்கள் சிறு குழந்தைகளின் தலையைத் தொடுவது வழக்கம்," என்றும் அவர் கூறினார்.
கீழே விழுந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு தனக்கு வலி ஏற்பட்டதாகவும், அந்த வலிக்கு பாராசிட்டமால் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், யியோவின் மகன், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், "என் தந்தைக்கு நீதி கிடைக்கும்" என்று தான் உண்மையாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































