மோபி டிக்: 'மனித மாமிசத்தை உண்ணும் நிலை' - திமிங்கிலத்தால் நடுக்கடலில் சிக்கிய மாலுமிகளின் கதை

மோபி டிக்: 'ராட்சத' திமிங்கலம் குறித்த நமது அச்சத்திற்கு சவால் விடுத்த 19-ஆம் நூற்றாண்டு நாவல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எலிசபெத் சுலிஸ் கிம்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சுமார் 175 ஆண்டுகள் பழமையான அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்லின் புகழ்பெற்ற படைப்பு, மனிதனுக்கும் திமிங்கிலத்திற்கும் இடையிலான மோதலைச் சொல்லும் மிகச் சிறந்த கதையாகத் திகழ்கின்றது. ஆனால் உண்மையில், இந்த மாபெரும் கடல் உயிரினங்களைக் கண்டு மனிதர்கள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

காலத்தையும் இடத்தையும் கடந்து, விலங்குகளை நண்பர்களாக, ஒத்துழைப்பாளர்களாக, தொல்லை தருபவையாக, தெய்வங்களாக, சிலைகளாக, பேய்களாக எனப் பல்வேறு விதங்களில் நாம் பார்த்துள்ளோம். அவற்றைப் பற்றிய நமது பார்வையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

எனது புதிய புத்தகமான 'தி புக் ஆஃப் பீஸ்ட்ஸ்: ரிக்ளெய்மிங் அனிமல் விஸ்டம்' (The Book of Beasts: Reclaiming Animal Wisdom) என்ற நூலில், விலங்குகள் உடனான நமது உறவுகளின் உணர்வுபூர்வமான வரலாற்றை நான் பதிவு செய்துள்ளேன். மேலும், அவற்றை நாம் நடத்தும் விதத்தில் கதை சொல்லும் முறை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் குறித்துச் சிந்தித்துள்ளேன்.

பல வழிகளில், நமது பொதுவான எதிர்காலம் கவலைக்குரியதாகத் தெரிகிறது. 1970 முதல் 2000ஆம் ஆண்டு வரை காட்டுயிர்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளது. ஆனால், குறிப்பாக ஓர் உயிரினத்துடனான மனிதர்களின் உறவு நமக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்.

அது திமிங்கிலம். பண்டைய காலங்களிலும் இடைக்காலத்திலும் திமிங்கிலங்கள் கடல் அரக்கர்களுடனும் சாத்தானுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டன. ஆனால், இப்போது அவற்றைப் பார்க்கவும் பாதுகாக்கவும் நம்மில் பலர் விரும்புகிறோம்.

திமிங்கிலத்தைப் பற்றிய இந்தப் புதிய பார்வையில் ஒரு முக்கியமான தருணம் 175 ஆண்டுகளுக்கு முன்பு, ஹெர்மன் மெல்வில்லின் 'மோபி டிக்' நாவல் வெளியானபோது ஏற்பட்டது.

மனிதனுக்கும் திமிங்கிலத்திற்கும் இடையிலான மோதலைக் கூறும் இந்த பிரமாண்டமான அமெரிக்க கதை, அதன் துயரமான கதாநாயகன் கேப்டன் ஆஹாப், 'மோபி டிக்' என்ற வெள்ளை நிற ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் மீதான வெறியால் இறுதியில் உயிரிழப்பதைச் சொல்கிறது.

இந்தக் கதையை இஷ்மாயேல் என்ற மாலுமி விவரிக்கிறார். பணத்தையும் சாகசத்தையும் தேடி ஆஹாப்பின் திமிங்கில வேட்டைப் பயணத்தில் அவர் இணைகிறார். ஆனால், கப்பலில் இருந்தபோது, இந்தப் பயணத்திற்கான உண்மையான காரணத்தை ஆஹாப் அறிவிக்கிறார். அது, பழிவாங்குதல்.

முந்தைய பயணத்தில் தனது காலைக் கடித்துத் துண்டித்த மோபி டிக்கை துரத்திக் கொல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆனால், கடல்வாழ் உயிரினத்தின் மீது ஆஹாபுக்கு இருந்த அதே வெறுப்பை பகைமையைக் கொண்டிருக்கவில்லை.

மாறாக, "அரக்கத்தனமான" விலங்குகள் குறித்த மனிதர்களின் அச்சம் எங்கிருந்து வருகிறது என்று வாசகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் அவரது கதை அமைந்துள்ளது. மேலும், அந்த அச்சங்கள் அந்த விலங்குகளைப் பற்றிக் கூறுவதைவிட நம்மைப் பற்றியே அதிகம் கூறுகின்றனவா என்றும் சிந்திக்க வைக்கிறது.

ஸ்பெர்ம் திமிங்கலத்தால் 'தி எசெக்ஸ்' திமிங்கல வேட்டைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தின் சித்திரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் 'தி எசெக்ஸ்' திமிங்கில வேட்டைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தின் சித்திரம். இந்தச் சம்பவம்தான் மோபி டிக் புனைவுக்கு உத்வேகம் அளித்தது.

மோபி டிக் புனைவுக்கு உத்வேகம் அளித்த உண்மைக் கதை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மெல்வில் 'மோபி டிக்' நாவலை வெளியிட்ட நேரத்தில், திமிங்கிலங்களை வேட்டையாடும் தொழில் எனப்பட்ட 'வேலிங்' ஒரு மிகப்பெரிய வணிகத் தொழிலாக வளர்ந்திருந்தது.

திமிங்கிலங்களைக் கொன்று, அவற்றின் கொழுப்பைச் சேகரித்து 'ட்ரெயின் ஆயில்' தயாரிப்பதற்காக திமிங்கில வேட்டைக்காரர்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.

இந்த எண்ணெய் தொழிற்புரட்சிக் கால இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயாகவும், வேகமாக வளர்ந்து வந்த நகரங்களில் 'கொழுப்பு விளக்குகளுக்கு' எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.

'மோபி டிக்' தொடங்கும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரமான நான்டக்கெட், மாசசூசெட்ஸ், திமிங்கல வேட்டையின் தலைநகரமாக மாறியது. இதனால் அந்த நகரம் "உலகுக்கு ஒளியூட்டிய நகரம்" என்ற புனைப் பெயரையும் பெற்றது.

திமிங்கில வேட்டைக்காரர்கள் நேரடிக் கண்காணிப்பின் மூலம் திமிங்கிலங்களைப் பற்றி கற்றுக்கொண்டனர். அதே நேரத்தில், விஞ்ஞானிகள் திமிங்கிலங்களின் மாதிரிகளைப் பெற்று அவற்றை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தினர். உடற்கூறியல் வேறுபாடுகள் மற்றும் பரிணாம வரலாற்றின் அடிப்படையில், வகைப்பாட்டியல் திமிங்கிலங்களையும் பிற விலங்குகளையும் நேர்த்தியான வகைகளாகப் பிரித்தது.

இறுதியாக, மனிதர்கள் இருள் சூழ்ந்திருந்த கடலுக்கு அடியிலுள்ள உலகத்தையும் புரிந்துகொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், இயற்கை உலகை முன்கூட்டியே கணிக்க முடியுமென்ற இந்தக் கருத்துகளுக்கு சில திமிங்கிலங்கள் தொடர்ந்து சவால் விடுத்தன.

மோபி டிக்: 'ராட்சத' திமிங்கிலம் குறித்த நமது அச்சத்திற்கு சவால் விடுத்த 19ஆம் நூற்றாண்டு நாவல்

பட மூலாதாரம், Getty Images

தெற்கு பசிபிக் பெருங்கடலில், 1820 நவம்பர் 20ஆம் தேதி, 'தி எஸ்செக்ஸ்' என்ற திமிங்கல வேட்டைக் கப்பலை ஒரு ஸ்பெர்ம் திமிங்கலம் தாக்கி மூழ்கடித்தது. இருபது பேர் மூன்று படகுகளில் தப்பினர். சுமார் மூன்று மாதங்கள் கடலில் தத்தளித்த அவர்கள், பசி மற்றும் நீரிழப்பால் பாதிக்கப்பட்டனர். பின்னர், உயிர் தப்பிய இருவர் எழுதிய பதிவுகளின்படி, இறுதியில் அவர்கள் மனித மாமிசத்தையே உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உயிர் தப்பியவர்களில் கப்பலின் மூத்த குழு உறுப்பினரான ஓவன் சேஸும் ஒருவர். அவர் நடந்த சம்பவம் குறித்து எழுதிய பதிவு 'மோபி டிக்' புதினத்திற்கு உத்வேகம் அளித்தது. நிஜ வாழ்க்கையில் நடந்த இந்தத் துயரச் சம்பவமும், அதிலிருந்து உருவான மிகப்பெரிய கற்பனைக் கதையும், ஒரு திமிங்கிலம் கப்பலைத் தாக்கக்கூடும் என்ற மிகவும் சாத்தியமற்ற எண்ணத்தை அதற்கு முன்பில்லாத அளவுக்கு மக்களின் கூட்டு கற்பனையில் பதிய வைத்தன.

ஒரு திமிங்கிலம் கப்பலைத் தாக்குவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்தான். வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் சுமார் ஐந்து மட்டுமே உள்ளன. திமிங்கிலங்கள் மோதலைத் தவிர்க்கின்றன. மேலும், எஸ்செக்ஸ் கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்கள் தற்போது தற்செயலான மோதல்கள் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால், மெல்வில் தாமே காட்ட விரும்பியதைப் போல, நமது அச்சங்கள் எப்போதும் பகுத்தறிவுடன் இருப்பதில்லை.

மெல்வில் 'பண்டைய அரக்கனையும்' அதன் மனித எதிரிகளையும் எவ்வாறு பார்க்கிறார்?

இஷ்மாயேல் விவரிப்பதைப் போல, கேப்டன் ஆஹாபின் பகுத்தறிவற்ற தன்மைக்கு எல்லையே இல்லை. தனக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்திய திமிங்கிலத்தைப் பழிவாங்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

தனது குழுவினர் உலகம் முழுவதும் மோபி டிக்கை துரத்த வேண்டுமென அவர் அறிவிக்கிறார். "அது கருப்பு ரத்தத்தைப் பீய்ச்சும் வரை, அதன் துடுப்பு வெளியே தெரியும் வரை" அதைத் துரத்த வேண்டும் என்கிறார்.

இதன் மூலம் சொல்லப்படுவது என்னவெனில், ஆஹாபும் மற்ற திமிங்கில வேட்டைக்காரர்களும் திமிங்கிலங்களை எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லலாம். ஆனால், ஒரு திமிங்கிலம் திருப்பித் தாக்கினால், அவர்கள் காட்டும் கோபம் அளவிட முடியாததாக இருக்கும்.

மோபி டிக்: 'ராட்சத' திமிங்கிலம் குறித்த நமது அச்சத்திற்கு சவால் விடுத்த 19ஆம் நூற்றாண்டு நாவல்

பட மூலாதாரம், Getty Images

உண்மையில், திமிங்கிலத்தின் மீது மனிதர்களுக்கு ஏற்பட்ட அச்சம், தங்கள் சொந்த பாதிப்புக்கு உள்ளாகும் தன்மை குறித்த அவர்களுக்குள் ஒடுக்கப்பட்டிருந்த அச்சங்களைப் பற்றியதாகவே இருக்கலாம்.

எஸ்செக்ஸ் கப்பலைத் தாக்கிய திமிங்கிலம் குறித்து ஓவன் சேஸ் பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் திரும்பிப் பார்த்தேன். அது… வழக்கமான வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்தக் கணத்தில், அதன் தோற்றத்தில் பத்து மடங்கு கோபமும் பழிவாங்கும் உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றியது."

திமிங்கிலம் எதைக் குறிக்கிறது என்பதில் ஆஹாப்பைவிட இஷ்மாயேலுக்கு உறுதியான கருத்து இல்லை. அவர் அச்சத்திற்கும் மரியாதைக்கும் இடையே மாறிக்கொண்டே இருக்கிறார். ஆனால், திமிங்கிலத்தை பைபிளில் குறிப்பிடப்படும் 'லெவியாதன்' என்ற கடல் அரக்கனுடன் அவர் வெளிப்படையாக இணைத்துப் பார்க்கிறார். "மகத்தான லெவியாதன் என்பது கடவுள் தனது விளையாட்டுக்காகவே படைத்த உலகின் ஒரே உயிரினம்" என்று அவர் கூறுகிறார்.

இடைக்காலத்தின் பிற்பகுதியில், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும் தத்துவஞானியுமான தாமஸ் அக்வினாஸ் போன்ற கிறிஸ்தவ அறிஞர்கள் லெவியாதனை திமிங்கிலமாக வெளிப்படையாக அடையாளப்படுத்தினர். மெல்வில், பண்டைய காலத்து அரக்கனை நமக்குக் காட்டினார். அதே நேரத்தில், காலங்காலமாக நிலவி வந்த இந்தப் பார்வையையும் கேள்விக்கு உள்ளாக்கினார்.

அறியப்படாதவற்றைப் பற்றிய மனிதர்களின் விரிவான உணர்வுகளுக்கான ஒரு பிரதிநிதியாக திமிங்கிலம் எவ்வாறு மாறியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆஹாபை பொறுத்தவரை, வெள்ளைத் திமிங்கலம் குழப்பம், அலட்சியம் மற்றும் கொடூரத்தின் உருவகமாக இருக்கிறது.

"கண்ணுக்குத் தெரியும் அனைத்து பொருட்களும்… வெறும் அட்டைப் பலகை முகமூடிகள் மட்டுமே" என்று ஆஹாப் கூறுகிறார்.

கேப்டன் ஆஹாப் ஆக கிரிகோரி பெக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1956ஆம் ஆண்டு வெளியான மோபி டிக் ஹாலிவுட் திரைப்படத் தழுவலில் கேப்டன் ஆஹாப் பாத்திரத்தில் கிரிகோரி பெக்

திமிங்கிலத்தின் வெளிப்புற உடல் தோற்றம் ஒரு முகமூடி மட்டுமே என்றும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய, தீய சக்தி மறைந்து இருப்பதாகவும் அவர் பார்க்கிறார். மோபி டிக்கின் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் அந்த "புரிந்துகொள்ள முடியாத விஷயத்தை" அழிக்க ஆஹாப் விரும்புகிறார். அவர் குறிப்பிடும் இந்தப் புரிந்துகொள்ள முடியாத விஷயம், இயற்கையில் இருப்பதாக அவர் கருதும் தீய சக்தியாகும். அதை சாத்தான், கடவுள் அல்லது விதி என்று அழைக்கலாம்.

இஷ்மாயேல், திமிங்கிலத்தின் மீது "ஆதாம் காலத்தில் இருந்து அவனது ஒட்டுமொத்த இனமும் உணர்ந்த அனைத்து பொதுவான கோபத்தையும் வெறுப்பையும்" ஏற்றி வைத்திருப்பதாகக் கருதுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதர்கள் மிருகங்களைக் கொல்வதை வீரச் செயலுடன் தொடர்புபடுத்தி வந்திருக்கிறோம். அவற்றுடன் இணைந்து வாழ்வதே அதிக துணிச்சலான பாதையாக இருந்தாலும், இந்தக் கதைகளில் இருந்து விடுபடுவது கடினம்.

விலங்குகளுக்கோ அல்லது சக மனிதர்களுக்கோ பொருந்தும் நல்லது, கெட்டது போன்ற இருமைக் கருத்துகள், தெளிவற்ற தன்மையில் இருந்து தப்பிக்கத் தூண்டும் எளிதான வழியாக இருக்கின்றன. ஆனால், மெல்வில்லும் 'மோபி டிக்' நாவலும் இதை நிராகரிக்கின்றன.

அந்தக் காலத்தில் திமிங்கிலங்களை ஒரு பொருளாகப் பார்ப்பதே தங்களது வேலையாக இருந்தவர்களிடையேகூட, திமிங்கிலங்கள் ஒரே மாதிரியான ஒன்றாக ஒருபோதும் கருதப்படவில்லை. சில திமிங்கில வேட்டைக்காரர்கள் திமிங்கிலங்களை அரக்கர்கள் என்று குறிப்பிட்டனர். மற்றவர்கள் அவற்றை நேரடியாகக் கவனித்ததன் மூலம் அவற்றின் மீது பரிவு அல்லது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டனர்.

மோபி டிக்: 'ராட்சத' திமிங்கிலம் குறித்த நமது அச்சத்திற்கு சவால் விடுத்த 19ஆம் நூற்றாண்டு நாவல்

பட மூலாதாரம், Getty Images

"கடலின் இந்தப் பிரமாண்டமான லெவியாதனை வெட்டிக் கொல்வதைவிட மிகவும் அச்சமூட்டும் வேறு எதையும் என்னால் கற்பனை செய்ய முடியாது" என்று திமிங்கில வேட்டைக்காரர் ஜே. ராஸ் பிரவுன், 1846ஆம் ஆண்டு வெளியிட்ட 'எட்சிங்ஸ் ஆஃப் எ வேலிங் க்ரூஸ்' (Etchings of a Whaling Cruise) என்ற தனது புத்தகத்தில் எழுதினார்.

நவீன காலத்தில் திமிங்கிலத்தின் உருமாற்றம்

திமிங்கில வேட்டையின் உச்சகட்ட காலத்தில் இருந்து இரண்டு தலைமுறைகள் கடந்த நிலையில், திமிங்கிலங்கள் இப்போது மக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

'மோபி டிக்' நாவலைப் படிக்கும் இன்றைய வாசகர்களில் பலர், திமிங்கில வேட்டைக்காரருக்குப் பதிலாக திமிங்கிலத்தையே ஆதரிக்கின்றனர்.

கடந்த நூற்றாண்டில், மாறி வந்த பொருளாதாரச் சூழல் வணிக ரீதியான திமிங்கில வேட்டையை வெகுவாகக் குறைத்துள்ளது. (எனினும், அது முழுமையாக முடிவுக்கு வரவில்லை. சர்வதேசத் தடைகள் இருந்த போதிலும், நார்வே, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இன்னும் லாபத்துக்காக திமிங்கிலங்களை வேட்டையாடுகின்றன.)

மேலும், மெல்வில்லின் காலத்தில் திமிங்கிலங்கள் உடனான நமது உறவை வரையறுத்த அச்சமும் பொருளாதாரச் சுரண்டலும் பெருமளவில் மாறி, அவற்றின் மீது கொண்டுள்ள பாராட்டும், அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற விருப்பமும் தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளன.

உண்மையில், மனிதர்களின் கொடூரத்துக்கு எதிராக திமிங்கிலங்கள் திருப்பித் தாக்குகின்றன என்ற கருத்தை மனிதர்கள் இப்போது ஏற்றுக் கொள்கிறார்கள். அவை என்ன செய்கின்றன என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை என்றாலும், அதைப் பற்றிய நமது கதைகள் மாறிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் கடற்கரைகளில் ஓர்காக்கள், அதாவது கொலைகாரத் திமிங்கிலங்கள், படகுகளை மோதித் தாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கேனரி தீவுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு ஸ்பெர்ம் திமிங்கலம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேனரி தீவுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு ஸ்பெர்ம் திமிங்கலம். இன்று அவை போற்றப்படும் விலங்குகளாகும்.

இவை சமூக ஊடகங்களில் "ஓர்கா எழுச்சி" என்று அழைக்கப்படுகின்றன. எனினும், அவற்றின் செயல்கள் வேண்டுமென்றே பகைமையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு அறிவியலிடம் இன்னும் அதிக ஆதாரங்கள் இல்லை.

மனிதர்களின் பார்வையில் திமிங்கிலங்கள் மாறியதில் ஒரு முக்கியமான கட்டம் 1967ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது அமெரிக்க உயிரியலாளர் ரோஜர் பெய்ன் திமிங்கிலங்களின் பாடலைப் பதிவு செய்தார். அது மனிதர்களை நெகிழச் செய்தது. அதன் பிறகு, திமிங்கிலங்கள் சிக்கலான தகவல் தொடர்புத் திறனைக் கொண்டுள்ளன என்பதைப் பற்றிப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபோன்ற திறன் மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்று முன்பு நம்பப்பட்டது.

திமிங்கிலங்களும் மனிதர்களின் அன்பையும் கருணையையும் திருப்பிக் காட்டும் திறனைக் கொண்டிருக்குமா?

எனது புத்தகத்தில், திமிங்கிலங்களால் காப்பாற்றப்பட்ட வியட்நாமிய மீனவர்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்துள்ளேன். இந்தச் சம்பவங்கள் அவர்களின் நாட்டுப்புற மத நம்பிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. திமிங்கிலங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானி நான் ஹவுசருடனும் நான் உரையாடியுள்ளேன். அவரும் ஒரு முறை ஹம்ப்பேக் திமிங்கிலத்தால் காப்பாற்றப்பட்டவர்.

மோபி டிக்: 'ராட்சத' திமிங்கிலம் குறித்த நமது அச்சத்திற்கு சவால் விடுத்த 19ஆம் நூற்றாண்டு நாவல்

பட மூலாதாரம், Getty Images

கடல் சூழலியல் நிபுணர் ராபர்ட் பிட்மேன் மேற்கொண்ட ஆய்வுகளில், ஹம்ப்பேக் திமிங்கிலங்களிடையே இனங்களைக் கடந்த பரோபகாரச் செயல்கள் காணப்பட்டுள்ளன. அவை, ஓர்காக்களிடம் இருந்து சீல்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுகின்றன.

இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரியாத நிலையில், இந்தச் சம்பவங்களும் ஆய்வுகளும் திமிங்கிலங்களுக்கு ஓர் அக உலகம் இருக்கிறது என்ற கருத்தை உறுதி செய்கின்றன. அது நம்முடைய அக உலகத்துக்கு இணையானதாக இருக்கக்கூடும்.

நான்டக்கெட்டை சேர்ந்த சேஸ் காஃபின், ஓவன் சேஸின் நேரடி வாரிசு. அவரது குடும்பத்தினர் தங்களது திமிங்கில வேட்டை பாரம்பரியத்தைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால், திமிங்கிலங்கள் குறித்த அவர்களின் உணர்வுகள் மாறிவிட்டன.

"எனது குடும்பம் இப்போது ஒவ்வோர் ஆண்டும் 'சேவ் தி வேல்ஸ்' அமைப்புக்கு நன்கொடை அளிக்கிறது. என் வாழ்நாளில் பெரும்பாலான காலம் நான் சைவ உணவையே சாப்பிட்டு வருகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

நமக்குள் ஒடுக்கி வைத்திருக்கும் அச்சம் மற்றும் குற்ற உணர்வுகளில் இருந்து நாமே எப்படி அரக்கர்களை உருவாக்குகிறோம் என்பதை மெல்வில் நமக்குக் காட்டினார். நாம் நம் சொந்த கற்பனைகளுக்கும் பார்வைகளுக்கும் அப்பால் பார்க்கும்போது, இந்த விலங்குகளின் உண்மையான ஆழத்தை இறுதியாகப் புரிந்துகொள்ள முடியும்.

'தி புக் ஆஃப் பீஸ்ட்ஸ்: ரிக்ளெய்மிங் அனிமல் விஸ்டம்' என்ற புத்தகம் Chatto & Windus பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு