You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரஹலாத் ஜோஷி: புதிய கல்வி அமைச்சர் பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஆதரித்தாரா? காங்கிரஸ் விமர்சனம்
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா, டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த ஜென் ஸி இயக்கத்தின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் மறுநாளே மோதி அரசு கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை பிரஹலாத் ஜோஷியிடம் ஒப்படைத்தது. பிரஹலாத் ஜோஷி மற்றும் தர்மேந்திர பிரதான் இருவருமே ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர்களாக இருந்தவர்கள். இருப்பினும், பாஜக தலைவர்களுக்கு இந்த அடையாளம் மிகவும் பொதுவானது.
பிரஹலாத் ஜோஷி கல்வி அமைச்சரானவுடனேயே அவருடன் தொடர்புடைய சில சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கின.
கர்ப்பிணிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளின் விடுதலையை பிரஹலாத் ஜோஷி ஆதரித்தார் என, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராகுல் காந்திக்கு முன்பாக இதே கருத்தை பிரியங்கா காந்தி மக்களவையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து நாடாளுமன்ற அவை குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்டது.
பிரியங்கா காந்தியின் இந்த கருத்து குறித்து பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பிரஹலாத் ஜோஷியும் மக்களவையில் பதிலளித்தார். பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ''பிரியங்கா கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் தவறான தகவல்களைத் தருகிறார், இதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேச முடியுமா? நான் இதைக் கண்டிக்கிறேன்'' என்றார்.
பில்கிஸ் பானு வழக்கில் பிரஹலாத் ஜோஷி என்ன கூறியிருந்தார்?
2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகள் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு குஜராத்தின் பாஜக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்தபோது, பிரஹலாத் ஜோஷி அவர்களை விடுவித்ததை ஆதரித்துப் பேசினார்.
அப்போது பிரஹலாத் ஜோஷி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி பிரஹலாத் ஜோஷி என்டிடிவியின் அப்போதைய மூத்த பத்திரிகையாளர் சீனிவாசன் ஜெயினிடம், "அரசும் அது தொடர்பான நபர்களும் இந்த முடிவை எடுத்திருக்கும் போது, இதில் தவறாக எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் இது சட்டத்தின் கீழ் நடக்கும் நடைமுறையாகும்" என்று கூறியிருந்தார்.
சிறையில் நீண்ட காலம் கழித்த குற்றவாளிகளை, தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிப்பதற்கான விதிமுறைகள் உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
அவர், "சட்டப்படிதான் இது செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். அந்த நேரத்தில் பிரஹலாத் ஜோஷி குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
குஜராத் அரசின் முடிவை ஆதரித்துப் பேசிய பிரஹலாத் ஜோஷி, "நல்ல நடத்தையின் அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. இந்த விவகாரம் வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கப்படுவதாக நான் கருதுகிறேன். இருப்பினும், எந்தவொரு குற்றவாளிக்கும் அவரது குற்றத்துக்கான தண்டனை கிடைத்தே தீர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
என்டிடிவி தனது செய்தியில், ''குஜராத் அரசு தாக்கல் செய்த 470 பக்க பிரமாணப் பத்திரத்தில், குற்றவாளிகளின் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்கும் போது மத்திய அரசு பல கடுமையான ஆட்சேபனைகளைப் புறக்கணித்திருந்தது தெரியவந்துள்ளது. குஜராத் அரசு ஜூன் 28-ஆம் தேதி (2022) மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியது. இதன் பிறகு, ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் வெறும் ஒரு பக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை'' என்று தெரிவித்திருந்தது.
பாஜக கூறுவது என்ன?
பாஜக செவ்வாய்க்கிழமை பிரியங்கா காந்தியின் கருத்தைக் கண்டனத்துக்குரியது மற்றும் தவறானது என்று கூறியது. பாஜக சார்பில் கட்சியின் ஊடகப் பிரிவின் அமைப்பாளரும் மக்களவை எம்பியுமான அணில் பலூனி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
''ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அவைக்குள் ஒரு மத்திய அமைச்சருக்கு எதிராக இதுபோன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து பிரஹலாத் ஜோஷி இதுபோன்ற எந்த கருத்தையும் வெளியிடவே இல்லை. அவர் சட்ட நடைமுறைகள் குறித்து மட்டுமே கருத்துத் தெரிவித்தார், வழக்கின் தகுதி-தராதரங்கள் குறித்து அல்ல" என அணில் பலூனி கூறினார்.
"இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ரா உண்மைகளைச் சரியாகப் படித்துப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அரசியல் வசதிக்காக கருத்துகளை திரித்துக் கூறுவதும், நாட்டைத் தவறாக வழிநடத்துவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் காங்கிரஸ் கட்சியின் வழக்கமாகிவிட்டது" என்றார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமூக ஊடகங்களில் பிரஹலாத் ஜோஷியின் கருத்து அடங்கிய வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.
பிரஹலாத் ஜோஷியைக் கல்வி அமைச்சராக்கியதன் செய்தி என்ன?
கல்வி அமைச்சகத்தின் பொறுப்பைப் பிரஹலாத் ஜோஷியிடம் ஒப்படைத்தது, மோதி அரசின் கல்வி கொள்கை குறித்த அடிப்படைச் சிந்தனையில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்பதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
வரலாற்றாசிரியர் முகுல் கேசவன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ''பிரஹலாத் ஜோஷியிடம் கல்வி அமைச்சகம் வழங்கப்பட்டபோது, இதுதான் காக்ரோச் ஜனதா கட்சியின் வெற்றியா என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த ஒருவருக்கு பதிலாக அதே அமைப்பை சேர்ந்த மற்றொருவர் கல்வி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.''
முகுல் கேசவன் கூறுகையில், ''இந்த விமர்சனமும் வாதமும் சரியானதே, ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. இது எந்தவொரு அடையாளத்துக்கான போராட்டமும் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-ஐ சாராத நபர் பாஜகவில் யார் இருக்கிறார்? காக்ரோச் ஜனதா கட்சிக்கு இது ஒரு அடையாள வெற்றி என்பதுடன் ஒரு சக்திவாய்ந்த அரசுக்கு எதிராக இதுபோன்ற வெற்றியும் முக்கியத்துவம் பெறுகிறது. பிரஹலாத் ஜோஷியைக் கல்வி அமைச்சராக்கி தனது கொள்கை மாறப்போவதில்லை என்ற செய்தியை பாஜக கொடுத்துள்ளது. தற்சமயம் அழுத்தத்தின் காரணமாக முகத்தை மட்டுமே மாற்றியுள்ளது'' என்றார்.
முகுல் கேசவன் கூறுகையில், ''இளைஞர்களுக்குத் தாங்கள் எந்த அளவுக்குப் போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியும், எது வரை அரசைப் பணிய வைக்க முடியும் என்பது தெரிந்திருந்தது. எனவேதான் ஏற்றுக்கொள்வதற்குப் பெரிய கஷ்டம் இல்லாத கோரிக்கையை அவர்கள் அரசின் முன் வைத்திருந்தனர். இது ஒரு கணக்கிடப்பட்ட போராட்டமாகும், எனவே இதன் முடிவையும் இந்த ரீதியில்தான் பார்க்க வேண்டும்.''
'நரேந்திர மோதி: தி மேன், தி டைம்ஸ்' புத்தகத்தின் ஆசிரியர் நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகையில், பிரஹலாத் ஜோஷியைக் கல்வி அமைச்சராக்கியதன் மூலம் இளைஞர்களின் கோரிக்கைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற செய்தியை அரசு வழங்கியுள்ளது என்றார்.
''தர்மேந்திர பிரதானுக்குப் பதிலாக கல்வி அமைச்சகப் பொறுப்பை யாருக்கு வழங்கியுள்ளாரோ, அது அவரது தீவிரத்தைக் காட்டவில்லை. கல்விச் செயலாளராக ஆக்கப்பட்டுள்ள நபரும் இவர்களின் தீவிரத்தைக் காட்டவில்லை. இவர்கள் இருவர் மீதும் பலவகையான குற்றச்சாட்டுகள் உள்ளன'' என முகோபாத்யாய் கூறுகிறார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்றவரும் அரசியல் ஆய்வாளருமான யோகேந்திர யாதவும் பிபிசி ஹிந்தியின் உதவி ஆசிரியர் பங்கஜ் பிரியதர்ஷியுடனான உரையாடலில், தர்மேந்திர பிரதான் விலகியதால் கல்வியில் கொள்கை ரீதியான மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பிரஹலாத் ஜோஷி மூலம் பாஜக பதிலளித்துள்ளது என்று கூறியிருந்தார்.
குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்த கௌராங் ஜானி கூறுகையில், பாஜகவுக்குக் கல்வி அமைச்சகம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இளைஞர்களை இங்கிருந்துதான் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
''கல்வி என்பது இளைஞர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு துறையாகும். எனவேதான் கொள்கை மற்றும் பாடத்திட்டம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இவர்களின் புதிய கல்விக் கொள்கையில் பாரம்பரிய அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இவர்களின் பாரம்பரிய அறிவு என்பது இந்து மதத்தின் புராணக் கதைகளுக்குள்ளேயே சுருங்கிவிடுகிறது'' என கெளராங் ஜானி சொல்கிறார்.
''இவர்கள் தாய்மொழியை ஊக்குவிப்பது குறித்துப் பேசியுள்ளனர், ஆனால் இந்திய மொழிகளில் புத்தகங்களும் இல்லை, ஆராய்ச்சிகளும் இல்லை. நவீன மதிப்பீடுகள் மேலைநாடுகளின் கலாசாரம் என்று கருதி இவர்கள் அவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்பக் காலத்தில் இவர்களின் பார்வைகள் வேரூன்ற முடியாது.''
''அனைத்துப் பணிகளும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடக்கும்போது, கல்வி அமைச்சராக யார் இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை'' என்கிறார் பேராசிரியர் கௌராங் ஜானி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு