இந்தியாவில் சர்க்கரை விலை உயர எத்தனால் பயன்பாடு காரணமா? அச்சம் எழுவது ஏன்?

உயர்ந்து வரும் சர்க்கரை விலைகளுக்கு எத்தனாலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர்ந்து வரும் சர்க்கரை விலைகளுக்கு எத்தனாலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது
    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி குஜராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் சர்க்கரை விலை 20% உயர்ந்துள்ளது.

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஆகஸ்ட் 20 அன்று சில்லறை சந்தையில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.55.7 ஆக இருந்தது. அதே அறிக்கை, ஒரு மாதத்திற்கு முன்பு சர்க்கரை விலை கிலோ ரூ.48.18 ஆக இருந்ததாகவும், 2025 ஆகஸ்ட் 20 அன்று அதன் விலை கிலோ ரூ.46.3 ஆக இருந்ததாகவும் கூறுகிறது.

இதற்கு முன் சர்க்கரை விலை இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். எல் நினோ காரணமாக ஏற்பட்ட பலவீனமான பருவமழையும் சர்க்கரை விலையை பாதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மத்திய அரசின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு கிட்டத்தட்ட கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. ஐந்து ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் நான்கு லட்சம் ஹெக்டேர் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜன்மாஷ்டமியுடன் தொடங்கும் பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. அதிகரித்து வரும் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த, சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், மொத்த விற்பனை வர்த்தகர்கள் வைத்திருக்கக் கூடிய சர்க்கரையின் அளவுக்கும் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை விலை உயரக் காரணம் என்ன?

பிரேசிலுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய அரசின் தரவுகள்படி, நாட்டில் மொத்தமாக கரும்புச் சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் 703 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில், 335 தனியார் ஆலைகள், 325 கூட்டுறவு ஆலைகள், 43 அரசு ஆலைகள் உள்ளன.

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி ஆண்டு, அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைகிறது.

சர்க்கரை ஆலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கேதன் படேல் இதுகுறித்துப் பேசியபோது, "2025-26 சர்க்கரை உற்பத்தி ஆண்டில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 32 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையில் சுமார் 30 மில்லியன் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது" என்றார்.

எனினும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு கடந்த ஆண்டைப் போலவே கிட்டத்தட்ட உள்ளது. ஐந்து ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 4 லட்சம் ஹெக்டேர் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா முக்கியமான சர்க்கரை உற்பத்தியாளராக உள்ளது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி குஜராத்திக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டதால், கரும்பு பயிர் பாதிக்கப்பட்டது. அதேபோல், உத்தர பிரதேசத்தில் அதிக மகசூல் தரும் CO-0238 ரக கரும்பு மஞ்சள் துரு நோயால் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டு காரணங்களாலும் கரும்பு உற்பத்தியும், சர்க்கரையைப் பிரித்தெடுக்கும் விகிதமும் குறைந்தது. அதாவது, நூறு கிலோ கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவு 12 கிலோவுக்கும் கீழ் சென்றது. இதனால், எதிர்பார்த்ததைவிட சர்க்கரை உற்பத்தி குறைந்தது" என்றார்.

இந்தியாவில் சர்க்கரை நுகர்வு 26 மில்லியன் டன்கள் முதல் 28 மில்லியன் டன்கள் வரை இருப்பதாகவும், பொதுவாக ஆண்டு இறுதியில் 60 முதல் 70 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும் எனவும் கேதன் படேல் தெரிவித்தார்.

மேலும், பிபிசி குஜராத்தியிடம் அவர் பேசும்போது, "2024-25 நிதியாண்டின் இறுதியில் இருந்த கையிருப்பு வெறும் 50 முதல் 50.5 லட்சம் டன்களாக மட்டுமே இருந்தது. இதனால், 2025-26ஆம் ஆண்டு குறைவான தொடக்கக் கையிருப்புடன் தொடங்கியது. உற்பத்தியும் எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாக இருந்தது. சர்க்கரை உற்பத்தியை பாதிக்கும் ஒரே காரணியாக பலவீனமான பருவமழையை மட்டுமே கூறிவிட முடியாது" என்று விளக்கினார்.

இருப்பினும் அவரது கூற்றுப்படி, "சர்க்கரை விலை மேலும் உயரும் என்ற அச்சத்தில் மக்கள் பதற்றத்துடன் அதிக அளவில் வாங்குவதாகத் தெரிகிறது. ஒருபுறம் கையிருப்பில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது, பண்டிகைக் காலமும் வந்துவிட்டது, மழை குறித்த கவலையும் இருக்கிறது. மறுபுறம், தேவை அதிகமாக உள்ளது. இதன் விளைவாக விலை உயர்ந்துள்ளது."

இந்தியாவில் சர்க்கரை நுகர்வு 26 மில்லியன் டன்கள் முதல் 28 மில்லியன் டன்கள் வரை இருப்பதாகவும், பொதுவாக ஆண்டு இறுதியில் 60 முதல் 70 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும் என்றும் கேதன் படேல் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த முறையும் இந்தியாவில் பருவமழை பெருமளவில் பெய்யவில்லை

சர்க்கரைத் தட்டுப்பாடு நிலவுகிறதா?

இந்தியாவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளின் அமைப்பான இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ISMA) இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, நாட்டில் ஜவுளித் துறைக்கு அடுத்தபடியாக, கரும்பு சார்ந்த தொழில்துறைதான் இரண்டாவது மிகப்பெரிய வேளாண் சார்ந்த தொழில்துறையாக விளங்குகிறது.

ஐஎஸ்எம்ஏ-வின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5.5 மில்லியன் முதல் 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக 450 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 50 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போதைய சர்க்கரை நிலவரம் குறித்து அரசாங்கத்தின் கருத்தை அறிய, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபென் பாம்பானியாவை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் பிபிசி தொடர்புகொள்ள முயன்றது. அதற்கு உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், ஜூலை 28 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

"ஆலைகளில் சர்க்கரை விலையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு, தற்போதைய தேவை மற்றும் விநியோக நிலைக்கு ஏற்றதாக இல்லை என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும்" அந்தச் செய்திக் குறிப்பில் அரசு குறிப்பிட்டுள்ளது.

அதோடு, "சில வர்த்தகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள், ஆலைகளில் இருந்து சர்க்கரை உண்மையில் எடுத்துச் செல்லப்படாமலேயே, அதைப் பதுக்கி வைப்பது, ஊக வணிகத்தில் ஈடுபடுவது மற்றும் ஆவணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை சந்தையில் சர்க்கரைத் தட்டுப்பாடு இருப்பது போன்ற செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன."

"இதுபோன்ற பரிவர்த்தனைகள் தவிர்க்கக் கூடிய விலை ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. மேலும், சர்க்கரை ஆலைகளிலும் சில்லறைச் சந்தையிலும் சர்க்கரை விலை உயர்வதற்கும் காரணமாகியுள்ளன. நாட்டின் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான அளவுக்கு சர்க்கரை போதுமான கையிருப்பில் உள்ளது என்பதை நுகர்வோருக்கு அரசு உறுதியளிக்கிறது" என்று அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

“நாட்டின் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான அளவுக்கு சர்க்கரை போதுமான கையிருப்பில் உள்ளது என்பதை நுகர்வோருக்கு அரசு உறுதியளிக்கிறது” என்று அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எத்தனால் கலப்பு போன்ற திட்டங்களும் சர்க்கரை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

சர்க்கரை விலை எப்போது குறையும்?

ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சர்க்கரை உற்பத்திக்கான இடைக்காலமாகக் கருதப்படுகின்றன. இந்தக் காலம் பண்டிகைக் காலத்துடனும் ஒத்துப் போகிறது. எனவே, ஒவ்வோர் ஆண்டும் இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை விலை உயர்வதாகக் கூறுகிறார் கேதன் படேல்.

"தற்போது விலை ரூ.50க்கும் அதிகமாக இருந்தாலும், உண்மையில் இந்தப் பருவத்தில் சர்க்கரை விலை பொதுவாக ரூ.38 முதல் ரூ.42 வரைதான் இருக்கும். அந்த விலையில், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையை (எஃப்ஆர்பி ) ஆலைகளால் சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.

"இதன் காரணமாக, சில விவசாயிகள் கரும்பு சாகுபடியில் இருந்து, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் வருமானம் கிடைக்கும் பிற பயிர்களுக்கு மாறியுள்ளனர். சர்க்கரை கையிருப்பு விற்பனையாகும் என்பது சந்தையில் அதன் விலை உயர்வதால் ஆலைகளுக்குக் கிடைக்கும் நன்மை. இதனால், விவசாயிகளுக்கு எஃப்ஆர்பி தொகையை சரியான நேரத்தில் வழங்க முடியும். அதேநேரம், அக்டோபர் மாதத்தில் இருந்து புதிய சர்க்கரை சந்தைக்கு வரும். எனவே, விலை குறையும்" என்று தெரிவித்தார்.

எனினும், சுரேந்திரநகரை சேர்ந்த முன்னணி சர்க்கரை வர்த்தகர் தன்ராஜ் கைலா பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "தற்போது சந்தையில் சர்க்கரைத் தட்டுப்பாடும் இல்லை, அதிகப்படியான கையிருப்பும் இல்லை. நிலைமை அன்றாடத் தேவைக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, சந்தைக்கு வரும் சர்க்கரை உடனடியாக விற்பனையாகிறது" எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் சர்க்கரை விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அவரது கருத்துப்படி, "இதற்கு உலகளாவிய சர்க்கரை கையிருப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். மறுபுறம், 30 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் தயாரிப்புக்காக மாற்றப்பட்டுள்ளது. கணிசமான அளவு சர்க்கரை ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது."

மேலும் பேசிய அவர், "நாட்டில் சுமார் 150 கோடி சர்க்கரை நுகர்வோர் இருக்கும்போது, ஓரிரு ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டால், எத்தனால் கலப்பு போன்ற திட்டங்கள் ஆபத்தானவையாக மாறுகின்றன. எல் நினோவால் மழை பெய்யாமல் போகலாம், சர்க்கரை விலை மேலும் அதிகரிக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இதன் விளைவாக, முன்பு 5 கிலோ சர்க்கரை வாங்கியவர்கள் இப்போது 50 கிலோ வாங்குகின்றனர். முன்பு 50 கிலோ வாங்கியவர்கள் இப்போது 100 கிலோ கேட்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்பட்டதால் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதா?

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெயை நுகரும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. ஆயினும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியைக் குறைப்பது, அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, தற்சார்பை அதிகரிப்பது, மாசுபாட்டைக் குறைப்பது ஆகிய நோக்கங்களுக்காக, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு 2018இல் முடிவு செய்தது.

இந்த இலக்கை 2030க்குள் எட்ட வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2025 ஜூலை மாதத்திலேயே அரசு இந்த இலக்கை எட்டியது. இந்தியாவின் சர்க்கரைத் தொழில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.

ஒரு சர்க்கரை ஆலை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சர்க்கரையை விற்பனை செய்யலாம் என்பதையும், சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாமா என்பதையும் அரசே தீர்மானிக்கிறது. நாட்டில் அதிக அளவில் எத்தனாலை வாங்கும் நுகர்வோராகவும் அரசு உள்ளது. எனவே, எத்தனாலின் விலையும் மறைமுகமாக அரசால் தீர்மானிக்கப்படுகிறது.

எனினும், சுரேந்திரநகரைச் சேர்ந்த முன்னணி சர்க்கரை வர்த்தகர் தன்ராஜ் கைலா பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “தற்போது சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடும் இல்லை, அதிகப்படியான கையிருப்பும் இல்லை. நிலைமை அன்றாடத் தேவைக்கேற்றதாக உள்ளது, அதாவது, சந்தைக்கு வரும் சர்க்கரை உடனடியாக விற்பனையாகிறது.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல் நினோ காரணமாக மழை பெய்யாது என்றும், சர்க்கரையின் விலை அதிகரிக்கும் என்றும் மக்கள் அஞ்சுவதாக சர்க்கரை வர்த்தகர்கள் கருதுகின்றனர்

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2025-26ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தியில் 30 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. இது நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம்.

கரும்புச் சாற்றைத் தவிர, சர்க்கரைப் பாகு, ஏ-ஹெவி மொலாசஸ், பி-ஹெவி மொலாசஸ், சி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றில் இருந்தும் எத்தனால் தயாரிக்க முடியும். ஒரு செய்தியின்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த எத்தனாலில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கரும்பில் இருந்து பெறப்படுகிறது.

பெரிய சர்க்கரை ஆலை ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட விரும்பாமல் பிபிசி குஜராத்தியிடம் பேசினார். அப்போது அவர், "பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் ஒரு முக்கியமான திட்டம். இது சர்க்கரை ஆலைகளுக்கு பணப் புழக்கத்தை வழங்குகிறது. ஆனால், சர்க்கரை உற்பத்திக்குத்தான் எப்போதும் முதலிடம் என்று அரசு தெளிவாகக் கூறியுள்ளது" என்றார்.

"எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதை அரசு தடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டுவது எளிது" என்று குறிப்பிட்ட அவர், "ஆரம்பத்தில் சர்க்கரை உற்பத்தி குறித்த மதிப்பீடுகள் மிக அதிகமாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கான எந்தத் துல்லியமான முறையோ தொழில்நுட்பமோ நம்மிடம் இல்லை என்பதுதான் பிரச்னை."

அதோடு, "நாம் பேசிக் கொண்டிருக்கும் சர்க்கரை சந்தை எவ்வளவு பெரியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, எத்தனால் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்ட சர்க்கரையால்தான் தற்போது நாட்டில் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்ட முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு