ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? தொழிலதிபர் வழக்கில் புதிய உத்தரவு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT), தொழிலதிபர் சுபாஷ் சந்திரா தொடர்பான தனது முடிவில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது.

சுபாஷ் சந்திராவின் கடன் தீர்வு திட்டம் தொடர்பாக ஒருமித்த முடிவுக்கு வருவதற்காக, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தற்போது 5 பேர் கொண்ட அமர்வை அமைத்துள்ளது.

₹22,000 கோடிக்கும் அதிகமான தொகையை மீட்டெடுப்பது தொடர்பான திவால் வழக்கு இது. இரண்டு பேர் கொண்ட அமர்வில் பெரும்பான்மை முடிவை எட்ட முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தற்போது தெரிவித்துள்ளது.

₹22,006.57 கோடி அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராக ₹6.25 கோடி செலுத்த முன்வைக்கப்பட்ட சுபாஷ் சந்திராவின் முன்மொழிவுடன் இந்த விவகாரம் தொடர்புடையது.

சந்திராவின் பணம் செலுத்தும் திட்டத்தை அங்கீகரிப்பதில் பெரும்பான்மை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று என்.சி.எல்.டி தெரிவித்துள்ளது.

ஆரம்ப அமர்வில் இருந்த இரு உறுப்பினர்களின் கருத்துகளில் இருந்து என்.சி.எல்.டி உறுப்பினரின் கருத்து மாறுபட்டிருந்தது.

ஆகஸ்ட் 25ஆம் தேதி மூன்றாவது உறுப்பினரான நிலேஷ் சர்மா 144 பக்கங்களைக் கொண்ட தனது கருத்தைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது. இது சந்திராவின் பணம் செலுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகவே பரவலாகக் கருதப்பட்டது.

என்.சி.எல்.டி நீதித்துறை உறுப்பினர்களான அசோர் குமார் பரத்வாஜ் மற்றும் ரீனா சின்ஹா பூரி ஆகியோர் தனித்தனி தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 3ஆம் தேதி இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

₹22,000 கோடிக்கு பதிலாக ₹6.25 கோடி செலுத்தும் திட்டத்துக்கு பரத்வாஜ் ஒப்புதல் அளித்தார். எனினும், இந்தத் திட்டத்தை ஆதரித்த கடனளிப்பவர்களுக்கு மட்டுமே அதன் விளைவு பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களது கடன்களை மீட்டெடுப்பதற்காக தனித்தனியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர அவர் அனுமதித்தார்.

ரீனா சின்ஹா பூரி இந்தத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தார். இந்த முழு விவகாரமும் விதிமுறைகளை மீறுவதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுபாஷ் சந்திராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில நிறுவனங்களை கடனளிப்பவர்களின் வாக்கெடுப்பு செயல்முறையில் சேர்த்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியதுடன், ஒட்டுமொத்த செயல்முறையையும் விமர்சித்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

இதையடுத்து, இந்த விவகாரம் மூன்றாவது உறுப்பினரான நிலேஷ் சர்மாவிடம் பரிந்துரைக்கப்பட்டது. சர்மா இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், எதிர்ப்பு தெரிவித்த கடனளிப்பவர்கள் தொடர்பாக பரத்வாஜ் எடுத்த நிலைப்பாட்டை அவர் ஏற்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடனளிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் செயல்படுத்த சட்டத்தின் பிரிவு 115 அனுமதிக்கவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

அவர்களின் கூற்றுப்படி, திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அல்லது எதிராக வாக்களித்திருந்தாலும், அனைத்து கடனளிப்பவர்களுக்கும் அந்தத் திட்டம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

என்.சி.எல்.டி கூறுகையில், "ஆரம்ப உத்தரவில், நீதித்துறை உறுப்பினர் இந்தத் திட்டத்துக்கு அளித்த ஒப்புதல், அதை ஏற்றுக்கொண்ட கடனளிப்பவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. அதே நேரத்தில், எதிர்ப்பு தெரிவித்த கடனளிப்பவர்கள் தங்களது கடன்களை மீட்டெடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டது. இது மூன்றாவது உறுப்பினர் திட்டத்துக்கு அளித்த ஒப்புதலிலிருந்து வேறுபட்டது. அதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடனளிப்பவர்களின் கோரிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன" என்று தெரிவித்தது.

ஆரம்பத்தில் இருந்த எந்தவொரு கருத்துடனும் முழுமையாக உடன்படாமல், மூன்றாவது உறுப்பினர் தனித்துவமான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தீர்ப்பாயம் முடிவு செய்தது.

சட்ட நிலைப்பாட்டின்படி, ஆகஸ்ட் 25ஆம் தேதி வழங்கப்பட்ட கருத்து திரும்பப் பெறப்படவோ அல்லது மாற்றியமைக்கப்படவோ இல்லை. அது இறுதி ஒப்புதல் உத்தரவாகவும் மாறவில்லை. ஏனெனில், சட்டத்தின்படி தேவைப்படும் பெரும்பான்மை உருவாகவில்லை என்று பிரதான அமர்வு தற்போது கண்டறிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் மீண்டும் என்.சி.எல்.டி. தலைவரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திரா மீதான வழக்கு என்ன?

என்.சி.எல்.டி முன் நிலுவையில் இருந்த இந்த விவகாரம், சுபாஷ் சந்திரா தனிப்பட்ட உத்தரவாதம் அளித்தவராக கொண்டிருந்த பொறுப்பைச் சார்ந்ததே தவிர, எஸ்ஸெல் குழுமம் (Essel Group) என்ற நிறுவனத்தின் நிறுவன ரீதியான பொறுப்பைச் சார்ந்ததல்ல.

விவேக் இன்ப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் வழங்கிய ₹170 கோடி கடன் தொடர்பாக என்.சி.எல்.டி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அந்தக் கடனுக்காக சுபாஷ் சந்திரா தனிப்பட்ட உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

தனிப்பட்ட உத்தரவாதம் என்பது, கடன் பெற்றவர் அல்லது நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அந்தக் கடனைத் தானே திருப்பிச் செலுத்துவேன் என்று ஒருவர் அளிக்கும் உறுதிமொழியாகும்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சுபாஷ் சந்திராவின் அலுவலகம், அவர் எந்தக் கடன் வழங்குநரிடமிருந்தும் பணம் கடன் பெறவில்லை என்று விளக்கம் அளித்தது.

அந்த அறிக்கையில், "சந்திரா ஒரு தனிப்பட்ட உத்தரவாததாரர் மட்டுமே. தனிப்பட்ட திவால் நடவடிக்கைகளில், தனிப்பட்ட உத்தரவாததாரராக சுபாஷ் சந்திராவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மொத்த கோரிக்கை ₹22,000 கோடி அல்ல. திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடனளிப்பவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொகை ₹3,992 கோடி மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.22,000 கோடிக்கு பதிலாக ரூ.6.5 கோடி திருப்பிச் செலுத்தினால் போதும் - ஏன்?

சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கோரிக்கைத் தொகை ₹22,006.57 கோடியாகும். கடன் வழங்குநர்களுக்கு ₹6.25 கோடியும், இந்த நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் வழங்குவதற்கு தீர்வுத் திட்டம் முன்மொழிகிறது.

எனவே, 99.97% "ஹேர்கட்" என்பது, அங்கீகரிக்கப்பட்ட மொத்தக் கோரிக்கைகளையும், சந்திராவின் தனிப்பட்ட பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள தொகையையும் ஒப்பிடுவதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பொருள், சந்திரா தனிப்பட்ட முறையில் ₹22,006 கோடி கடன் பெற்றார் என்பதல்ல.

சந்திரா அறிவித்துள்ள தனிப்பட்ட சொத்துகளின் மதிப்பு சுமார் ₹31.79 கோடி என தீர்வுத் திட்ட நிபுணர் மதிப்பிட்டுள்ளார். சந்திரா திவால் நிலைக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைத்திருக்கும் தொகையைவிட, இந்தத் தீர்வுத் திட்டத்தின் மூலம் கடன் வழங்குநர்களுக்கு அதிக தொகை கிடைக்குமா என்பதை என்.சி.எல்.டி பரிசீலித்தது. இதையடுத்து, தீர்ப்பாயம் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த வழக்கில் சந்திரா ஏற்கெனவே வெளியிட்டிருந்த சொத்துகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்தச் செய்தியின்படி, "2017ஆம் ஆண்டு ஆர்பிஎல் வங்கிக்கு வழங்கப்பட்ட நிகர சொத்து மதிப்புச் சான்றிதழில், அவரது சொத்துகளின் மதிப்பு சுமார் ₹45,888 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு சான்றிதழில் அது சுமார் ₹40,562 கோடியாக இருந்தது. தற்போதைய வழக்கில் அவரது சொத்துகளின் மதிப்பு சுமார் ₹31.79 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது."

இந்த முரண்பாடு குறித்து விசாரிக்க தடயவியல் தணிக்கை நடத்த வேண்டும் என்று கடன் வழங்குநர்கள் கோரினர்.

திவால் மற்றும் வர்த்தக வழக்குகளைக் கையாளும் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோஹன் எஸ். வாசா, தி இந்துவிடம் கூறுகையில், "முந்தைய நிகர சொத்து மதிப்புச் சான்றிதழுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறது. ஆனால், அது மட்டுமே மோசடிக்கான ஆதாரமாகாது.

அதேபோல், தானாகவே தடயவியல் தணிக்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இல்லை.

இது கவலைக்குரியதாக இருக்கலாம். ஆனால், சந்தேகம் என்பது ஆதாரம் அல்ல. தற்போதைக்கு, குறிப்பிட்ட சொத்துகள் ஏதேனும் கடன் வழங்குநர்களை ஏமாற்றுவதற்காக மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன என்பதை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க கடன் வழங்குநர்கள் தவறிவிட்டதாக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தெரிவித்துள்ளது" என்றார்.

பழைய நிகர சொத்து மதிப்புச் சான்றிதழ்கள் மட்டும் சொத்துகள் மறைக்கப்பட்டன அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன என்பதை நிரூபிக்கவில்லை என்றும் என்.சி.எல்.டி இதேபோல் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தடயவியல் தணிக்கை கட்டாய முன்நிபந்தனை அல்ல என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

முகேஷ் அம்பானியைப் பற்றி சுபாஷ் சந்திரா என்ன கூறினார்?

என்.சி.எல்.டி -ன் முடிவு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சுபாஷ் சந்திரா வெளிப்படையாக முகேஷ் அம்பானியை விமர்சித்தார்.

குறிப்பாக TV18/CNBC-TV18 உள்ளிட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஊடகங்கள், சுபாஷ் சந்திரா தனிப்பட்ட முறையில் ₹22,000 கோடி கடன் பெற்றுவிட்டு, பின்னர் ₹6.5 கோடி செலுத்தி தப்பித்துவிட்டது போன்று இந்த வழக்கை சித்தரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜீ, இன்வெஸ்கோ மற்றும் ரிலையன்ஸ் இடையே ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பழைய நிறுவன ரீதியிலான பிரச்னையையும் சுபாஷ் சந்திரா மீண்டும் எழுப்பினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் முன்பு ஜீ மீடியாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய ஊடகச் செய்திகள் அந்தப் பழைய வர்த்தகப் போட்டியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சுபாஷ் சந்திராவின் குற்றச்சாட்டுகளை ரிலையன்ஸ் முற்றிலும் நிராகரித்தது. அவை அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அதன் ஊடக வர்த்தகம் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

தொழிலதிபர் மற்றும் தொழில் முனைவோர் என்ற முறையில் சுபாஷ் சந்திரா மீது தொடர்ந்து உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்தது.

ஜீ-இன்வெஸ்கோ விவகாரம் 2021ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, ஜீ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான இன்வெஸ்கோ, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியது.

ரிலையன்ஸ் நிறுவனமும், தனது ஊடக வர்த்தகத்தை இணைப்பது தொடர்பான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து ஜீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.

முன்மொழியப்பட்ட அந்த ஒப்பந்தம் அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை. அதன்பின்னர், ஜீ நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆனால் அந்த ஒப்பந்தமும் 2024ஆம் ஆண்டு தோல்வியடைந்தது.

இதையடுத்து, இந்திய ஊடகச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னியுடன் கூட்டணி அமைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு