தாத்தா கொலையில் காதலனுடன் சிக்கிய 13 வயது பேத்தி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handout
- எழுதியவர், சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
கேரளத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் காதலன் மற்றும் இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலப்புழாவில் 65 வயது முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது உடல் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
கைதான சிறுமியின் தாய் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் பாட்டியும் சென்றிருந்ததால், முதியவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த வழக்கில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 13 வயது பேத்தியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆலப்புழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கொலை தொடர்பான தகவல்களை அந்தச் சிறுமி தெரிவித்தார்.
"சிறுமி அளித்த வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் இருந்ததோடு, அவரது உடல் மொழியும் ஏதோ ஒன்றை மறைப்பது போல் இருந்ததால், அவரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிறுமி தெரிவித்த தகவல்களின் முரண்பாடுகள் ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டு, கொலைச் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்தன" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Handout
சிறுமியின் 17 வயது காதலன் மற்றும் 16, 17 வயதுடைய அவரது நண்பர்கள் இருவரும் இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக விஷ்ணு பிரதீப் கூறினார்
சிறுமி தனது வீட்டில் இருந்தபடியே கொலைத் திட்டத்தை ஒருங்கிணைத்ததாகவும், மூன்று சிறுவர்களும் வீட்டின் பின்புறத்தில் இருந்த காற்றோட்டப் பாதை வழியாக உள்ளே நுழைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
''சிறுவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும், முதியவருக்கும் சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரை கொலை செய்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்'' என்கிறார் விஷ்ணு பிரதீப்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் சுமார் 4.5 சவரன் நகைகள் சிறுவர்களின் வீடுகள் மற்றும் அடகு கடையிலிருந்து மீட்கப்பட்டதாக விஷ்ணு பிரதீப் கூறினார்.
தாத்தா மீது சிறுமிக்கு இருந்த அதிருப்தி இருந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுமி வீட்டுக்கு தாமதமாக வருவது குறித்து தாத்தா தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததாகவும், கண்டிப்புடன் வளர்த்து வந்ததால் சிறுமிக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டிருந்ததாகவும் எஸ்.பி விஷ்ணு பிரதீப் தெரிவித்தார்.
ஆனால் இந்தக் கொலைக்கான மற்றொரு காரணமாக, தனது தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தனது காதலனிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கைதான சிறுவர்களும் சிறுமியும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
திரைப்படத்தைப் பார்த்து வந்த யோசனை?
முதியவரை கொலை செய்ய சிறுவர்கள் இரண்டு திட்டங்களைத் தீட்டியதாகக் கூறும் விஷ்ணு பிரதீப், அதில் இரண்டாவது திட்டத்தையே அவர்கள் செயல்படுத்தியதாகத் தெரிவித்தார்.
"முதல் திட்டத்தை அவர்கள் ஒரு திரைப்படத்தில் பார்த்துள்ளனர். அதுபோல் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதையடுத்து, இரண்டாவதாகத் திட்டமிட்டபடி, மூச்சைத் திணறச் செய்து கொலை செய்தது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Handout
இந்த வழக்கில் அதிகபட்சமான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்கள், தடயவியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி விஷ்ணு பிரதீப் தெரிவித்தார்.
இதனிடையே, சிறார்களுக்கு எப்படி இத்தகைய கொடூர குற்றங்களை செய்வதற்கான எண்ணம் வருகிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினர் தரப்பில் பேச பிபிசி முயன்ற நிலையில் அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.
உளவியல் காரணங்கள் என்ன?
"சிறு வயதிலேயே சிறுவர்கள் கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபடுவதற்குப் பின்னால் உளவியல் காரணிகள், நண்பர்கள் குழுவின் தாக்கம், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்" என உளவியல் ஆலோசகர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
'’ஒரு குழந்தை ஏன் இதுபோன்ற குற்றத்தைச் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது, அதன் உளவியல் நிலையை கவனிக்க வேண்டியது அவசியம்." என்று குறிப்பிட்டார்.
சிறுவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தில் பெற்றோர் வழங்கும் கவனம், குழந்தைகளுடன் உருவாக்கப்படும் உறவு, அவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடான சூழல் ஆகியவை குழந்தையின் நடத்தையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























