பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியில் இரான் இணையுமா? முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியில் இரான் இணையுமா? முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்கா ஒப்பந்தத்தில் இரான் இணைவது குறித்த செய்திகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவரத் தொடங்கின.
    • எழுதியவர், அசாத் சுஹைப்
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்தில் இணைய இரானுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இரான் தெரிவித்துள்ளது.

இரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், திங்கட்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "மெக்கா ஒப்பந்தத்தில் இணைய எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. இருப்பினும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சில முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னதாக லெபனானின் 'அல்-மயாதீன்' தொலைக்காட்சி நிறுவனம், பெயர் குறிப்பிடப்படாத இரான் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, "மெக்கா ஒப்பந்தத்தில் இணைய இரானுக்கு அழைப்பு வந்துள்ளது. அது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்று செய்தி வெளியிட்டிருந்தது.

மெக்கா ஒப்பந்தத்தில் இரான் இணையப்போவதாக வெளியான செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அப்போது இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி இது தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி அரசு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மொஹ்சென் ரெசாயி கூறுகையில், இரான் மெக்கா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இணைய வேண்டுமெனில், அது ஒப்பந்தத்தின் "இணை நிறுவன உறுப்பினராக" கருதப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படை ஆவணங்களை உருவாக்குவதில் இரானுக்கு பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரான் வேறு என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது?

பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியில் இரான் இணையுமா? முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதுபோன்ற ஒப்பந்தங்களில் இருந்து இரானும் எகிப்தும் விலகி இருக்க முடியாது என்று மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார்.

மெக்கா ஒப்பந்தம் போன்ற பிராந்திய ஏற்பாடுகளில் இருந்து இரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் விலக்கப்படக் கூடாது என்று மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.

மேலும், "இதுபோன்ற ஒப்பந்தங்களில் இரானும் எகிப்தும் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், இணை நிறுவன உறுப்பினர்களாக அவர்கள் பங்கேற்க வேண்டும். அதாவது, கையெழுத்திடப்படும் ஆவணங்களை உருவாக்கும் போது அவர்களின் கருத்துகளும் யோசனைகளும் இடம்பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிய மொஹ்சென் ரெசாயி, "இந்த நட்பு நாடுகள்" முதலில் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் இரானின் ஒப்புதல் அல்லது ஆதரவை நாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார்.

உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா காமனெயியின் மூத்த ஆலோசகராகவும் இருக்கும் மொஹ்சென் ரெசாயி, இந்த மெக்கா ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலை பலவீனமடைந்ததன் விளைவு என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தான், துருக்கி மற்றும் சௌதி அரேபியா போன்ற நமது நண்பர்களும் சகோதரர்களுமான நாடுகள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனென்றால் , அமெரிக்கா அவர்களிடம், 'நாங்கள் வெளியேறுகிறோம்' என்று கூறியுள்ளது" என்று தெரிவித்தார்.

மொஹ்சென் ரெசாயி கூற்றுப்படி, 'பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடம், பல நாடுகள் புதிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. அமெரிக்காவுடன் இரானுக்கு நீண்ட காலமாக இருந்து வரும் பகைமையின் விளைவே இந்த நிலைமை.'

பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியில் இரான் இணையுமா? முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் மெக்காவில் ஆகஸ்ட் 7, 2026 அன்று ஒரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

மெக்கா ஒப்பந்தத்தில் இரான் இணையுமா ?

ஆகஸ்ட் 10ஆம் தேதி, இரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் மாறிவரும் பாதுகாப்புக் கருத்துகளுக்கான சான்று என்று கூறி, அது குறித்து முற்றிலும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தார்.

பாகிஸ்தான், துருக்கி மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுடனும் இரான் தொடர்பில் இருப்பதாகவும், இந்த நடவடிக்கை குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரான் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இரானின் சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒரு கேள்வி எழுகிறது.

அதாவது மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது குறித்து இரானின் எண்ணம் என்ன? அந்த ஒப்பந்தத்தில் "இணை நிறுவன உறுப்பினராக" மட்டுமே இணைவது குறித்து இரான் ஏன் பேசுகிறது? இதுபோன்ற நிபந்தனைகளை சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஏற்றுக்கொள்ளுமா?

இரான் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்பினால், சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று சர்வதேச விவகார ஆய்வாளர் முனைவர் ஹசன் அஸ்கரி ரிஸ்வி கூறுகிறார்.

பிபிசி உருதுவிடம் பேசிய அவர், மொஹ்சென் ரெசாயி கூற்று, இந்த ஒப்பந்தத்தில் இணைய அதன் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்ய இரான் விரும்புகிறது என்பதை காட்டுவதாக கூறினார்.

இது துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மூத்த இரானிய அதிகாரி ஒருவரின் சமீபத்திய கருத்து, தற்போதைய மெக்கா ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கு எதிரான ஒப்பந்தமாக மாற்ற அவர் விரும்புவதைப் போல் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியில் இரான் இணையுமா? முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

பட மூலாதாரம், @SPA

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை அன்று, சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினர்.

அமெரிக்காவின் பங்கு என்னவாக இருக்கும்?

ஆனால் மறுபுறம், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மூன்று நாடுகளும், இந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டையும் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

இது ஒரு தற்காப்பு ஒப்பந்தம் என்றும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் அவை தெரிவித்துள்ளன.

முனைவர் அஸ்காரி கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு ஓரளவு குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், அது முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எனவே, இந்த விவகாரம் முழுவதையும் அவர் தொடர்ந்து கவனிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.

முனைவர் ஹசன் அஸ்காரி கூறுகையில், 'இரான் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தாலும், இணையாவிட்டாலும், அதன் இலக்கு அமெரிக்கா தான். இந்த ஒப்பந்தத்தில் இணையும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா நிறுவியுள்ள இடங்கள் மற்றும் தளங்கள் தொடர்பான அம்சங்களைச் சேர்க்க இரான் விரும்பக்கூடும்' என்று தெரிவித்தார்.

"அவ்வாறு நடந்தால், இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படும். அதை இந்த மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு எதிரான ஒப்பந்தம் என்ற தோற்றத்தை இந்த ஒப்பந்தத்துக்கு அவை அளிக்காது" என்று அவர் கூறினார்.

முன்னாள் தூதரக அதிகாரி அகீல் நதீமின் கூற்றுப்படி, மெக்கா ஒப்பந்தத்தில் இரான் ஆர்வம் காட்டுவதற்கான சாத்தியமான காரணங்களில், அமெரிக்கா அண்மையில் விதித்த பொருளாதார அழுத்தம் மற்றும் தடைகளும் இருக்கலாம்.

மெக்கா ஒப்பந்தத்தின் படி, அதில் பங்கேற்கும் மூன்று நாடுகளில் (பாகிஸ்தான், சௌதி அரேபியா, துருக்கி) ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளிப்புறத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி உருதுவிடம் பேசிய அகீல் நதீம், இந்த ஒப்பந்தத்தின் வரம்பு ராணுவ அல்லது நேரடி தாக்குதல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல், பொருளாதார அழுத்தம் மற்றும் தடைகள் போன்ற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என இரான் விரும்பக்கூடும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற சூழலில், உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அதற்கு கூட்டாக பதிலளிப்பதற்கான அல்லது ஒத்துழைப்பதற்கான ஓர் அமைப்பை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இது நிச்சயமாக ஒரு ஊகம் தான் என்று அவர் கூறினார்.

ஆனால், இரானின் சமீபத்திய நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளும்போது, இந்த சாத்தியத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், அவரது கருத்துப்படி, மெக்கா ஒப்பந்தத்தில் 'நிறுவன உறுப்பினர்' என்ற அந்தஸ்தை இரான் கோருவது நடைமுறையில் கடினமாகத் தெரிகிறது. ஏனெனில், இந்த ஒப்பந்தம் ஏற்கனவே சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகிவிட்டது.

இந்த மூன்று நாடுகளுமே அதன் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன.

அகீல் நதீமின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் ஒரு புதிய வகையான ஒப்பந்தத்தை உருவாக்குவது நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கலாம்.

அதில், ராணுவ அச்சுறுத்தல்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், பொருளாதார அழுத்தம் மற்றும் தடைகளுக்கு எதிராகவும் ஒத்துழைப்பது மற்றும் எதிர்ப்பது தொடர்பான ஓர் அமைப்பில் உறுப்பு நாடுகள் உடன்படலாம்.

இந்தச் சூழலில் தான் இரானின் சமீபத்திய ஆர்வத்தைப் பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு