You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன? 5 நாளாகியும் தெரியாததால் குடும்பத்தினர் கவலை
சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்து 5 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் இருந்து தங்களது உறவினர்களைத் தேடிச் சென்ற 20-க்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை என ஆன்மிகப் பயணத்தை ஏற்பாடு செய்த தனியார் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பல கிலோமீட்டர் தொலைவில் அடையாளம் காணப்படாத சடலங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பிலிருந்து மீண்ட தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்றொரு குழுவை சேர்ந்த 21 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் வேறு ஒரு குழுவில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 29 பேர் நேற்று (ஆகஸ்ட் 31) டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை என்ன என்பது குறித்த கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன.
'சீன அரசும் தகவல்களை பகிர வேண்டும்'
'நேபாள அரசிடம் இருந்து மட்டுமே மீட்கப்பட்டவர்களின் விவரங்கள் வருகின்றன. சீனாவில் மீட்கப்பட்டவர்களின் விவரங்களும் வழங்கப்பட வேண்டும்' என்று சென்னையில் இருந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுப்பதாக, சென்னையைச் சேர்ந்த தனியார் ஏஜென்சியின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஏஜென்சி நிறுவனர் மாறவேல் நாகப்பன்,"ஆகஸ்ட் 26ஆம் தேதி வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், மறுநாள் எங்கள் ஏஜென்சி மூலம் சென்றவர்களின் முழு விவரங்களையும் அரசிடம் வழங்கியுள்ளோம். எங்கள் ஏஜென்சி மூலம் சென்றவர்களின் குடும்பத்தினர் சுமார் 20 பேர் கொண்ட குழுவுடன் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று தேடினோம். ஆனால், பலன் கிடைக்கவில்லை," என்றார்.
"மீட்கப்பட்டவர்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடர்பான விவரங்களை நேபாள அரசு வழங்குவது போல, சீன அரசும் வழங்க வேண்டும். இதனைத் தமிழ்நாடு அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று சென்னையில் இருந்து சென்றவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்," என மாறவேல் நாகப்பன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?
"வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, அவற்றில் தமிழர்கள் இருந்தால் அவர்களை அடையாளம் காண தடயவியல் மற்றும் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு குழுக்களாக 319 பேர் சென்றுள்ளனர். அவர்களில் 219 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.
மேலும் விரிவாகப் பேசிய அவர், "கும்பகோணத்தில் இருந்து 57 பேரும், சென்னையில் இருந்து 49 பேரும் மட்டுமே சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து 57, 39, 150, 49, 15, 9 என பல்வேறு எண்ணிக்கையில் சிறிய குழுக்களாகவும் நேபாளத்துக்குச் சென்றுள்ளனர்," என்றார்.
"கண்டறியப்பட்ட 219 பேரில், 21 பேர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை வந்தனர். மீதமுள்ளவர்கள் விமான சேவையைப் பொறுத்து சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "இதுபோன்ற சம்பவங்களில் 20 நாட்களுக்குப் பிறகுகூட பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். பல நாடுகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், நம்பிக்கையுடன் இருப்போம்," என்றார்.
சில பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "தற்போது வரை அவர்கள் கண்டறியப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கம்யூனிகேஷன் ரேடார் மூலம் அவர்கள் கண்டறியப்பட்டால், அதற்கான தகவல்களை உடனுக்குடன் வழங்குவோம்," என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு