You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதயநிதி கைது: திமுக - தவெகவுக்கு அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதியை கைது செய்த தஞ்சை காவல்துறை, வாகனம் மூலமாக அவரை விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர். தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்
உதயநிதி கைதைக் கண்டித்து தி.மு.கவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
"புதன்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அவர் பங்கேற்றுவிடக் கூடாது' என்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க விமர்சித்துள்ளது.
"கைது சம்பவத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக பலனைப் பெறும் முயற்சியில் தி.மு.க இறங்கலாம்" என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காவிரி நீர் விவகாரத்தில் த.வெ.க அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திங்கள்கிழமையன்று தஞ்சையில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, "காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எந்தக் கவலையும் இல்லை. தி.மு.க மீது வழக்குப் போடுவது மட்டும் தான் ஒரே வேலையாக உள்ளது" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜூன் மாதம் முடிந்து ஜூலை மாதமும் வந்துவிட்டது. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம். ஆனால், இன்னமும் தண்ணீர் வரவில்லை. இதைப் பற்றி முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை" என அவர் விமர்சித்தார்.
அப்போது கூட்டத்தில் தொண்டர்கள் எழுப்பிய முழக்கமும் அதைத் தொடர்ந்து உதயநிதி பேசிய வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தின.
உதயநிதியின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
'ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை'
உதயநிதி கைதை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாட்டின் நலன் மற்றும் விவசாயிகள் நலனைக் கருதி ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை உதயநிதி முன்வைத்தார்" எனக் கூறினார்.
"உதயநிதியின் பேச்சில் எந்தவிதமான உள்நோக்கமும் குற்றமும் அவதூறும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சட்டப்பேரவை கூடும் நிலையில் அவரை பேரவைக்கு வரவிடாமல் தடுக்க நினைக்கின்றனர்" எனவும் அவர் விமர்சித்தார்.
தி.மு.க குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "சாதாரண நபராக இதனைக் கடந்து செல்ல முடியாது. பெண்களுக்கு எதிராக அவதூறு பேசினாலோ எந்தவித குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் சட்டப்பூர்வ நடவடிக்கையை காவல்துறை எடுக்கும்" எனக் கூறினார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், "தேவையில்லாமல் அவதூறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர் பேசிய ஒரு வார்த்தை ஏற்புடையதா எனப் பார்க்கட்டும். சட்டசபையில் வருவதற்குக் கூட தகுதியில்லை" எனக் குறிப்பிட்டார்.
"எதையும் மறைப்பதற்காக இதைச் செய்யவில்லை" எனக் கூறிய சி.டி.ஆர்.நிர்மல்குமார், " அம்மா (ஜெயலலிதா) இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் விஜய் செய்துள்ளார்" எனக் கூறினார்.
அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?
"கைது சம்பவத்தை முன்வைத்து உதயநிதி மூலம் கட்சிக்கு வலு கொடுப்பதற்கான முயற்சிகளில் தி.மு.க ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, அரசியல் ரீதியாக பலன் பெறுவதற்கான முயற்சிகளில் அக்கட்சி இறங்கும்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.
ஆனால், பொதுமக்கள் மத்தியில் உதயநிதி கைது விளைவுகளை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறும் அவர், "உதயநிதியைக் கைது செய்வதன் மூலம் சில நாட்கள் பேசப்படும். சட்டப்பேரவையில் பெரிய விவகாரமாக கொண்டு செல்ல தி.மு.க முயற்சிக்கும்" எனக் கூறுகிறார்.
உதயநிதியைக் காவல்துறை கைது செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "உதயநிதியை இன்றே (ஜூலை 4) விடுவிக்க வேண்டும். நாளை வரை விசாரணையைக் கொண்டு செல்லக் கூடாது" என உத்தரவிட்டார்.
உதயநிதியை காவல்துறை வாகனத்தில் கூட்டிச் சென்று அலைய வைப்பதன் மூலம் உளவியல்ரீதியாக சிரமப்படுத்துவதற்கு த.வெ.க அரசு முயற்சிப்பதாகவும் மாலன் தெரிவித்தார்.
"உதயநிதி பேசிய பேச்சு, நேரலையாக ஒளிபரப்பானது. அவர் பேசியது தவறானது எனக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்வதற்கான அவசியம் எங்கே வந்தது?" எனக் கேள்வி எழுப்புகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
"அவதூறு வழக்கை நீதிமன்றம் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கொடுக்கும். அதற்கு முன்னதாக கைது செய்யும் முயற்சியை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என அவர் குறிப்பிட்டார்.
1996-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 2001-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, மேம்பாலம் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைக் கைது செய்தார்.
இவ்விரு சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசும் கா.அய்யநாதன், "ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தேவையற்றதாக பார்க்கப்பட்டது. பதிலுக்கு கருணாநிதியை ஜெயலலிதா கைது செய்தார்" என்கிறார்.
"ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்து விசாரணை நடத்தலாம். அப்போது ஒத்துழைக்கவில்லையென்றால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யலாம். மேற்கண்ட வழக்குகளின் உதாரணம், உதயநிதிக்கும் பொருந்தும்" என அவர் குறிப்பிட்டார்.
"ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி மீது மேம்பால ஊழல் வழக்கு என அ.தி.மு.க அரசு கூறினாலும் அதை நிரூபிக்க முடியவில்லை" என்கிறார், மாலன்.
கருணாநிதி கைது செய்யப்பட்டவிதம் குறித்து சில காலம் விவாதிக்கப்பட்டதாகக் கூறும் அவர், "அதிகாலையில் கருணாநிதியைக் கைது செய்தனர். இதே பாணியில் உதயநிதியை த.வெ.க அரசு பழிவாங்குவதாக தி.மு.க முன்வைக்கும்" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய மாலன், "ஜெயலலிதா கைது, கருணாநிதி கைது போன்றவற்றில் இரு கட்சிகளுக்கும் பெரியளவில் பலன் கிடைத்ததாகப் பார்க்க முடியாது" எனக் கூறுகிறார்.
'த.வெ.கவை ஆதரிக்காத மக்களே இலக்கு'
வரும் நாட்களில் பெண்களை அவதூறு செய்யும் வகையில் தி.மு.க செயல்படுவதாக த.வெ.கவும் கருத்து சுதந்திரத்தைத் தடுப்பதாக தி.மு.கவும் பரஸ்பரம் மோதிக் கொள்ள வாய்ப்புள்ளதாக, மாலன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் த.வெ.கவை ஆதரிக்காத மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறும் மாலன், "தற்போது தேர்தல் சூழல்கள் இல்லாததால் பெரியளவுக்கு இந்த விவகாரம் செல்லாது" என்கிறார்.
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் போன்றவையே மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படியிருக்கும்போது உதயநிதி மீதான வழக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார். கா.அய்யநாதன்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு