விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? சூர்யா, மமிதா பைஜுவின் நடிப்பு எப்படி?

பட மூலாதாரம், Sithara Entertainments
- எழுதியவர், ஜி.ஆர். மகர்ஷி
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
'கருப்பு' படத்தின் வெற்றிக்குப் பிறகு சில மாத இடைவெளியில் நடிகர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'லக்கி பாஸ்கர்' போன்ற ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சிகாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் இதைத் தயாரித்துள்ளது.
படத்தின் கதை என்ன?
சரி, இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? படத்தின் கதை என்ன?
சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) ஒலிம்பிக் மட்டத்தில் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் (பிஸ்டல் ஷூட்டர்) வீரர். கோடிக்கணக்கான சொத்துகளுக்குச் சொந்தமான தொழிலதிபராக இருந்தாலும், 42 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
தங்கள் குடும்ப வம்சவிருத்தி இத்துடன் நின்றுவிடுமோ என்று அவரது தாய் நிர்மலா (ராதிகா) கவலை கொண்டுள்ளார். தாயின் மீது அதிக அன்பு கொண்ட சூர்யா, அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவர்களைச் சந்தித்து வாடகைத் தாய் முறை மூலம் குழந்தையைப் பெறுகிறார்.
ஆனால் தாய்க்கு இதில் விருப்பமில்லை என்றாலும், குழந்தையின் மீதுள்ள அன்பால் அதை ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில், அந்த பச்சிளம் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplantation) செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குழந்தைக்குத் தாயின் எலும்பு மஜ்ஜை தேவைப்படுவதால், அதற்காக சூர்யா அமெரிக்கா செல்கிறார்.
மாடி (மமிதா பைஜு) என்ற துருதுருவென இருக்கும் சுட்டிப் பெண்தான் வாடகைத் தாய்.
அவர் இதற்கு ஏன் சம்மதிக்கிறார்? அதேபோல், அறுவை சிகிச்சைக்காக இந்தியா வரும் மாடிக்கு, நாளுக்கு நாள் குழந்தையின் மீதான பாசம் அதிகரிப்பதோடு, சூர்யா மீதான காதலாகவும் அது மாறுகிறது.
இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை

பட மூலாதாரம், Fb/Sithara Entertainments
பழைய கதையாக இருந்தாலும்...
கதையைப் பொறுத்தவரை இதில் புதிதாக ஏதுமில்லை. என்.டி.ஆரின் 'ராமு' (1966), பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' (1983), நாகார்ஜுனாவின் 'சந்தோஷம்' (2002) ஆகிய படங்கள் இதே கதைக்களத்தைக் கொண்டவைதான். திருமணமான ஒரு நபர் மீது கதாநாயகி காதலில் விழுவது போன்ற கதைகள் ஏற்கெனவே வந்துள்ளன.
இங்கு என்னவென்றால், நாயகனுக்கு திருமணம் ஆகவில்லை; திருமணம் செய்து கொள்ளும் விருப்பமும் இல்லை. அதனால்தான் அவர் வாடகைத் தாய் முறையில் குழந்தையைப் பெறுகிறார். அந்தக் குழந்தையின் தாயோ நாயகனை விரும்புகிறார்.
இதுபோன்ற கதைகளைக் கையாளும்போது இயக்குநர் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், சூர்யா, மமிதா, ராதிகா ஆகியோரின் நடிப்பு படத்திற்குத் தூணாக நின்றுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி எங்குமே சமநிலையை மீறாமல், அதிகப்படியான சோகம் அல்லது கூச்சலிடுதலின்றி, சிறந்த வசனங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் படத்தை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார்.

பட மூலாதாரம், Fb/Sithara Entertainments
கதைக்குத் தேவையற்ற காட்சிகள்
ஆனால் என்ன சிக்கல் என்றால், படத்தின் முதல்30 நிமிடங்களிலேயே படம் எப்படி முடியப் போகிறது என்பது தெரிந்துவிடும். கணிக்கக்கூடிய இந்தக் கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதில் இரண்டாம் பாதியில் இயக்குநர் சறுக்குவது போலத் தோன்றுகிறது. கதைக்குத் துளியும் தேவையில்லாத சண்டைக் காட்சிகளும், துணைக் கதைகளும் அவசியமின்றி வந்து போகின்றன.
சூர்யாவின் ரசிகர்கள் வருத்தப்படக் கூடும் என்பதற்காக இரண்டு சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை ஏனோ திணிக்கப்பட்டவை போல் இருக்கின்றன. பாடல்களும் அதே போலத்தான்.
நாயகனின் தந்தையின் இரண்டாவது திருமணம், தங்கையின் திருமணம், நாசரின் பகுதி என இவை எதுவுமே கதையுடன் ஒன்றிப் போகவில்லை. ஒரு சிறிய வரிசைக் கதையை 2 மணி 40 நிமிடங்களாக இழுத்துச் சென்றது போல் அங்கங்கே தோன்றுகிறது.
நாயகனை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றவராகக் காட்டுவது கதையின் எந்த இடத்திற்கும் உதவவில்லை. 'லக்கி பாஸ்கர்' படத்தில் கண்ட அந்தக் கூர்மையான திரைக்கதை இந்தப் படத்தில் காணப்படவில்லை. பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியத்தைச் சுற்றிய கதையை மட்டுமே முழுமையாகச் சுழலவிடாமல் தவிர்த்தது மட்டும் இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Fb/Sithara Entertainments
யார் எப்படி நடித்திருக்கிறார்கள்?
இருப்பினும், சில சலிப்பான காட்சிகளைப் பொறுத்துக்கொண்டால், இதுவொரு தூய்மையான குடும்பத் திரைப்படமாக இருக்கும். சூர்யா, மமிதா பைஜு, ராதிகா ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். முதல் பாதியில் வரும் நாயகனின் டிரைவர் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான காட்சி சிறப்பாக வந்துள்ளது. வசனங்கள் சுருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன.
உதாரணமாக - "நம் கனவுகளுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்; ஆனால், எதற்காகவும் நமது கனவுகளைத் தியாகம் செய்யக்கூடாது."
ரவீனா டாண்டன், சர்வதமன் பானர்ஜி, நாசர் ஆகியோர் படத்தில் நடித்திருந்தாலும் அவர்களுக்குத் திரையில் பெரிய அளவில் இடமில்லை. வைவா ஹர்ஷா, ஆதி ஆகியோர் இருந்தாலும், படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. படத்தில் இருக்கும் ஓரளவு நகைச்சுவையும் சூர்யா, மமிதா, ராதிகா ஆகியோருக்கு இடையில்தான் வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை நன்றாக உள்ளது. எனினும், பாடல்கள் மனதில் நிற்கும் வகையில் இல்லை. கேமரா இயக்கம் அருமை. படத்தொகுப்பில் மேலும் 20 நிமிடங்களைக் குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். தயாரிப்பு மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
படத்தின் நிறைகள்:
சூர்யா, மமிதா, ராதிகா ஆகியோரின் நடிப்பு
வசனங்கள்
பின்னணி இசை
குறைகள்:
கதையை முன்பே எளிதாக ஊகிக்க முடிகிறது
இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது
தேவையற்ற சண்டைக் காட்சிகளும் துணைக் கதைகளும்
இறுதியாக: இதுவொரு ஃபீல்-குட் திரைப்படம். மமிதா பைஜுவின் நடிப்பு தனித்துத் தெரிகிறது. குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பார்க்கலாம்.
(குறிப்பு: இவையனைத்தும் விமர்சகரின் சொந்தக் கருத்துகளே)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
































