You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீனர்களை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் இஸ்ரேலிய குடியேறிகள்
ஞாயிற்றுக்கிழமை முதல், இஸ்ரேலிய குடியேறிகள் குஸ்ராவில் உள்ள சில பாலத்தீன வீடுகளைச் சூழ்ந்துகொண்டனர். பின்னர், இரவிலும், காலையிலும் இஸ்ரேல் ராணுவம் புல்டோசர்களுடன் அப்பகுதிக்கு வந்து அவர்களின் கூடாரங்களை அகற்றி, அவர்களை அங்கிருந்து வெளியேறச் செய்தன.
அடுத்த சில மணிநேரத்தில் மீண்டும் வந்த அவர்கள், அந்த குடும்பங்களை ஒரே வீட்டுக்குள் குடியேறுமாறும், மற்ற இரு வீடுகளையும் காலி செய்யுமாறும் தெரிவித்தனர்.
குஸ்ரா கிராமத்தில் இன்று காலை இஸ்ரேல் ராணுவம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. எனக்குப் பின்னால் மலைச்சரிவில் காணப்படும் சுமார் 11 வீடுகளை அவர்கள் ஆக்கிரமித்தனர். அந்தக் குடும்பங்களிடம், அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் அந்த கட்டடங்கள் ராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால், வீரர்கள் ஓய்வெடுக்க ஓரிடம் தேவைப்பட்டதால்தான் அவர்கள் அவ்வாறு செய்ததாக அந்தக் குடும்பங்கள் எங்களிடம் கூறின. முன்னதாக நாங்கள் கூரைகளின் மீது வீரர்கள் இருப்பதைக் கண்டோம். உடைமைகள் சேதமடைந்திருப்பதுடன், வீடுகளின் உள்பகுதியும் சீர்குலைந்து இருந்ததாக, சில குடும்பங்கள் எங்களிடம் தெரிவித்தன.
இந்தப் பிரச்னையை ஏற்படுத்துவது உண்மையில் ஒரு சில ‘பயங்கரவாத’ குடியேறிகளே என்பதாக இஸ்ரேல் அரசின் நிலைப்பாடும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரான மைக் ஹக்கபி இதுகுறித்து கூறிய கருத்தும் உள்ளது.
இருப்பினும் பரந்த அளவில் பார்க்கும்போது, இஸ்ரேல் அரசும் அமெரிக்க நிர்வாகமும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் குடியேற்ற விரிவாக்கத்தை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளன. சர்வதேச சட்டத்தின் கீழ், இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாக கருதப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு